மத்தியஸ்தரின் தவறான முடிவால் அரையிறுதி வாய்ப்பினை தவறவிட்ட புங்குடுதீவு மத்திய கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினரின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியில் இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகின்றது .

மேற்படி பத்து பாடசாலைகளில் ஐந்து சிங்கள மொழி மூல பாடசாலைகளும் , ஐந்து தமிழ் மொழி மூலப்பாடசாலைகளும் பங்கேற்றுள்ளன .

தீவகம் சார்பில் ஒரேயொரு அணியாக புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது .

குறித்த தொடரில் புங்குடுதீவு மத்திய கல்லூரி முதல் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனாவுடனான போட்டியில் தோல்வியுற்றபோதிலும் அளவெட்டி அருணோதயா கல்லூரியை புங்குடுதீவு மத்திய கல்லூரி தோற்கடித்ததோடு அநுராதபுர பாடசாலையுடனான போட்டியை 0 -0 என்றவாறு சமநிலையில் முடித்துக்கொண்டது .

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கும் கம்பளை சென் ஜோன்ஸ் பாடசாலைக்குமிடையில் நேற்று மாலை 5 மணியளவில் போட்டி நடைபெற்றது . இப்போட்டியில் சமநிலை பெற்றாலோ அல்லது வெற்றி அடைந்தாலோ அரையிறுதிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பினை புங்குடுதீவு மத்திய கல்லூரி கொண்டிருந்தது .

ஆனாலும் போட்டி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மத்தியஸ்தரின் தவறான முடிவினால் பெனால்டி ( தண்ட உதை ) வழங்கப்பட்டதால் 1- 0 என்றவாறு கம்பளை பாடசாலை அணி முன்னிலை பெற்றிருந்தது

நடுவரின் இத்தீர்ப்பு தவறானதென்றும் பக்கச்சார்பானதென்றும் புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி மாத்திரமன்றி மைதானத்தில் குழுமியிருந்த ஏனைய பாடசாலைகள் , ஆதரவாளர்கள் கூறியிருந்தபோதிலும் போட்டி ஏற்பாட்டுக்குழுவினரால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .

ஆனாலும் சளைத்திடாத புங்குடுதீவு மத்திய கல்லூரி பெண்கள் அணியினர் தொடர்ச்சியாக விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணியின் கோல்காப்பினை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர் .

இதனால் கம்பளை பாடசாலை அணியினர் புங்குடுதீவு மத்திய கல்லூரி வீராங்கனைகளை மிகமோசமான முறையில் கால் ,கைகளால் தாக்கி விளையாடியிருந்ததாக ரசிகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கம்பளை பாடசாலை அணியினர் றகர் ( ரக்பி ) விளையாடுவது போன்று கால்பந்தாட்டம் ஆடுவதாக மைதானத்தை சூழ குழுமியிருந்தவர்கள் கூச்சலிட்டதையும் அவதானிக்கமுடிந்தது .

ஆனாலும் அந்த அணிக்கு எதிராக நடுவரினால் ஒரு எச்சரிக்கையேனும் விடுக்கப்படவில்லை எனவும் பார்வையாளர்களால் விசனம் வெளியிடப்பட்டது .

இறுதிவரை சளைக்காது போராடிய புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி 1- 0 என்றவாறு தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது .

புங்குடுதீவு மத்திய கல்லூரி அணிக்கான போக்குவரத்து , மதிய உணவு , குளிர்பான அனுசரணைக்கான நிதியுதவியை ( ரூபாய் 30000 ) சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு.கருணாகரன் குணாளன் வழங்கியிருந்ததாக கல்லூரி சமூகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.