கல்முனை மாநகர நிதி மோசடி : கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை(9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஆஜர்படுத்தப்பட்ட இரு சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் கடந்த 7.8.2023 அன்று சாய்ந்தமருது பகுதியில் வைத்து கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில்  தற்காலிக சிற்றுழியர்களாக  கடமையாற்றிய இரு சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

கைதான இருவரும் கடந்த காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளில் வரி அறவீடு செய்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைதானவர்கள் முக்கிய வாக்குமூலங்களை வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் குறித்த வரிமோசடியுடன் தொடர்புடைய பல நபர்கள்  கைது செய்யப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஊழியர்களின் சேவைக்காலத்தில் வரியிறுப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளின் போது மேலும் மோசடி, முறைகேடுகள் எவையும் மேலும்  இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த காலங்களில் இவ்வரி மோசடி தொடர்பில்  விசாரணைகள் பல தரப்பினரால்  மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்    பலர் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த நிதிகையாடல் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில்  கல்முனை பொலிஸ் நிலையம் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை  பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில்   குற்றப்புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.