ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு எதிராக கோட்டா குரல் கொடுக்க வேண்டும் – சன்ன ஜயசுமன

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதியாக இருக்க கூடாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த முயற்சிகளை மீண்டும் கடுமையாக கண்டித்துள்ள சன்ன ஜயசுமன, தேசத்தின் நலன்களிற்கு பாதகமான விதத்தில் இந்த அரசாங்கம் செயற்பட முயல்வதால் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதியாகயிருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ச வென்ற ஐந்து வருட பதவிக்காலத்தை பூர்த்தி செய்வதற்காக நாடாளுமன்றம் ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தது என்றும் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பிரதிபலிக்கும் புதிய அரசமைப்பு என்ற வாக்குறுதியின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அந்த ஆணியை ஒற்றையாட்சியை இல்லாமல் செய்வதற்காக பயன்படுத்தப்படும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எவ்வாறு மௌனமாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மௌனம் காப்பது தற்போதைய நிகழ்ச்சி நிரலுக்கு அவர் மறைமுக ஆதரவு என்ற தவறான கருத்தை ஏற்படுத்தலாம் என்றும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.