இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியே மேர்வின் சில்வா! அனந்தி சசிதரன் கடும் காட்டம்

இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே மேர்வின் சில்வா காணப்படுகின்றார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன், நீங்கள் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) விகாரைகளை தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர் மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்கு சும்மா திரும்பி வரமாட்டேன், உங்களின் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) தலைகளை கையில் சுமந்து கொண்டுதான் களனிக்கு வருவேன். – என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே மேர்வின் சில்வா காணப்படுகின்றார். ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என அவரின் அடாவடி செயற்பாடுகளை பட்டியலிடலாம்.

ராஜபக்ஷக்களின் விசுவாசியாக அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேர்வின் சில்வா, 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர் பொதுத்தேர்தலில் போட்டியிட எந்தவொரு கட்சியும் இடமளிக்கவில்லை. இதனால் அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் தனது மகனுடன் இணைந்து மக்கள் சேவை எனும் கட்சியையும் ஆரம்பித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். பொதுத்தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் களமிறங்கினார். அதன்பின்னர் சுதந்திரக்கட்சி பக்கம் தாவினார். தற்போது எந்த கட்சி என தெரியவில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை அம்மையார் இலங்கை வந்திருந்தபோது, அவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என மிக கேவலமாகப் பேசி தன் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்.

இறுதியில் அது மேர்வினின் தனிப்பட்ட கருத்து எனக்கூறி மஹிந்த அரசுக்கு அப்போது மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேர்வினின் இந்த உரையை அவரின் கருத்து சுதந்திரம் எனக்கூறி நியாயப்படுத்திவிட முடியாது. இது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கும் கருத்தாகவே அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.