மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ள ஜப்பான்!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இலங்கையின் நீர்வளத்துறை, மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தற்போதைய செயல்திறன் மற்றும் அதனை எவ்வாறு மேம்படுத்துதல் என்பது குறித்தும் சுகாதார, பாதுகாப்பான நீர் உற்பத்தி ஆற்றல் தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது

அதேநேரம் சூரிய சக்தி மின் திட்டத்துக்கான முதலீடுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பம் பற்றி ஆராயும் நடவடிக்கையில் ஜப்பானிய தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன் பெருந்தோட்டத்துறையின் மறுசீரமைப்பு தொடர்பான தமது திட்டத்தை அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் மலையக மாற்றத்திற்கான புதிய திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் மலையக பெருந்தோட்ட சமூகங்களின் நிலைமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவு வழங்கப்படும் என ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன பிரதிநிதிகள் இந்சந்திப்பின் போது உறுதியளித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.