அரச தொழிற்சாலைகள், திணைக்கள பிரிவுகளை உள்ளடக்கிய விரைவான தடயவியல் கணக்காய்வு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்

அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய துரித தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இது சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தனுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதன் மூலம் நிறுவனத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் வெளிக்கொணர முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அரச தொழிற்சாலைகள் திணைக்களம் போன்ற நிறுவனத்தை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான கணக்காய்வை மேற்கொள்வது இன்றியமையாதது எனவும் தெரிவித்தார்.

அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதில் கலந்து கொண்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பிரதான களஞ்சியசாலை, வார்ப்புப் பிரிவு, இயந்திரப் பிரிவு, மின்சாரப் பிரிவு, கனரக வெல்டிங் பிரிவு மற்றும் தச்சுப் பிரிவு ஆகியவற்றின் செயற்பாடுகளையும் அமைச்சர் அங்கு அவதானித்தார்.

நிறுவனத்தின் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நிறுவனத்தின் உயர் அதிகாரி முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகக் கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்துமாறும் அமைச்சர் அங்கு வந்திருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு கலந்துரையாடலிலும் நிறுவனத்தின் ஒவ்வொரு தொழிற்சங்கத்தையும் ஈடுபடுத்துவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க –

‘இந்த நிறுவனத்தில் கணக்காய்வு நடத்த வேண்டும். இது இந்த நிறுவனத்தில் உள்ளவர்களிடம் குறை காண செய்யப்படவில்லை.

நிறுவனத்தின் குறைபாடுகள் என்ன என்பதைப் பார்க்கத்தான். தவறுகள் நடந்திருந்தால், திருடப்பட்டிருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தண்டனை வழங்கப்பட வேண்டும்.

யாரையும் காப்பாற்ற நான் தயாராக இல்லை. அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது தொழிற்சங்கத்துக்கும் விசுவாசமாக இருப்பவர்களாக இருக்கலாம். அந்த கணக்காய்வு அறிக்கை வந்ததன் பிறகு என்னால் எதுவும் செய்ய முடியாது.

இந்த நிறுவனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வணிக முன்மொழிவைத் தயாரிக்கவும். இவை அனைத்தும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காகவே செய்யப்படுகின்றன.

நிறுவனத்துக்கு உயர்வு கிடைத்தால் ஊழியர்களுக்கு நல்லது. அந்த நிர்வாகக் கூட்டத்தில், தொழிற்சங்கங்கள் தங்கள் தொழில் உரிமைகளுக்காகப் பேசலாம்.

ஆனால், எங்களுடைய சில நிறுவனங்கள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், பொறியியல் கூட்டுத்தாபனம் கடந்த காலங்களில் ஊழியர்களை நியமித்து அதிக அளவு சம்பளம் வழங்கியது.

ஆனால் இப்போது அவர்களால் ஒரு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை. இது நிறுவனத்துக்கு சுமை என்று தொழிற்சங்கங்கள் சத்தமிட்டிருந்தால் இந்த நிறுவனத்திற்கு இப்படி நடந்திருக்காது.

ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. நான் எந்த ஊழியர்களையும் நியமிக்கவில்லை. எனக்கு இப்போது அந்த நிறுவனத்தின் நிலை தெரியும். அரசியல் அதிகாரம் வந்து சில அழுத்தங்களை பிரயோகிக்கும் போது, இதை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கும் வலிமை உங்களுக்கு இருக்க வேண்டும்.

நிறுவனம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி பின்பு அவர்கள் வேலையை இழக்கும் போது யார் பொறுப்பு? நிறுவனத்தில் அதிக பணியாளர்கள் இருந்தால், தேவைப்படுபவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பலாம். ஏனென்றால் உங்கள் வருமானத்தில் இருந்துதான் சம்பளம் கொடுக்க வேண்டும்.

செலவுகள் குறைந்து இலாபம் அதிகரிக்கும் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். நான் எனது கருத்தை முன்வைக்கிறேன்.

இந்த விடயத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இந்த யோசனையை மேம்படுத்தி பணி ஆணை உருவாக்க முடியும் என நான் இராஜாங்க அமைச்சருக்கு கூறுகின்றேன். கொள்கை முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்தன், அரச தொழிற்சாலைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜேசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.