பௌத்த துறவிகளின் அடாவடிகள் இனமுறுகலுக்கு வழிவகுக்குமாம்! பா.அரியநேத்திரன் எச்சரிக்கை

இலங்கையில் உள்ள பௌத்த துறவிகள் சிலரின் அடாவடித்தனம் இனமுறுகலுக்கு தூபம் இடுகின்றது, இதனை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை எனில் மீண்டும் 1983, ஜூலை கலவரம் போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மேச்சல்தரையை பார்வையிட சென்ற ஊடகவியலாளர்கள் உட்பட சர்வமத தலைவர்கள் அடங்கிய குழுவினரை புத்த பிக்கு உட்பட சிங்கள குண்டர்கள் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை தடுத்து வைத்த சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் நாட்டில் எந்த இடத்திலும் எவருடன் சென்றும் தமது ஊடகப்ணியை செய்யும் உரிமை உண்டு.

அதுபோலவே சர்வமத தலைவர்களும் நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்த பிரச்சினைகள் உள்ள இடங்களுக்கு சென்று ஒரு சுமுகநிலை தொடர்பாக பார்வை இட்டு நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.

ஆனால், இவ்வாறான மனிதநேயம் கொண்ட மதத் தலைவர்களையும், அவர்களுடன் செய்தி சேகரிக்கச் சென்ற மட்டக்களப்பு ஊடகவியலாளர்களையும் வழிமறித்து தடுத்து வைக்க புத்தபிக்குக்கு இந்த அதிகாரத்தை வழங்கியவர் யார்?

பௌத்தபிக்குகள் காவி உடை அராஜகத்துக்காகவா இலங்கையில் உள்ளது. புத்தபகவானின் போதனை வழிமறித்து மனிதர்களை தடுத்து வைக்கவா போதித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரையில் அத்துமீறி குடியேற்றம் செய்யும் அராஜகத்தை தட்டிக் கேட்கவும் அதனை தடுக்குமாறும் பல வருடங்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தும், அதனை முன்பு இருந்த ஜனாதிபதிகளோ, தற்போதைய ஜனாதிபதி ரணிலோ எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் காட்டவில்லை.

அதன் உண்மை நிலையை நேரடியாக பார்வையிடவே சர்வமத தலைவர்கள், பண்ணையாளர்கள், ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர்.

அவர்களை வழிமறித்து ஒரு பௌத்த துறவி, குண்டர்களை கூட்டிவைத்து தடுத்து வைத்த காட்டுமிராண்டிச் செயலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாகவும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அதேவேளை, இவ்வாறான ஈனச்செயல்கள் தொடருமானால் ஓர் இனக்கலவரத்தை தூண்டும் இவ்வாறான பௌத்த துறவிகளை நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும்.

சர்வதேச சமூகம் போர் முடிந்து 14 வருடங்கள் கடந்தும் மீண்டும் இலங்கையில் இனக்கலவரத்தை் தூண்டும் பின்னணியில் உள்ள அரசியல் வாதிகளை இனம் காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.