தடையுத்தரவு பிறப்பிக்க கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரமில்லை – புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர்

பொரலுகந்த ரஜமஹா விகாரைக்கு சட்டபூர்வமாக விகாரை ஒன்று அமைக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் அந்த நிலத்துக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நகரங்கள்,பட்டிணங்கள் சபையின் செயலாளரிடம் தடையுத்தரவு விதிக்குமாறு கோரியுள்ளார். மாகாண ஆளுநருக்கு இந்த அதிகாரம் உள்ளதா என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மாகாண ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆகவே, சீலவங்ச தேரர் அந்த விகாரை பகுதிக்குள் உட்பிரவேசிக்கலாம், வசிக்கலாம் அதற்கு தடையேதும் இல்லை என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் திருகோணமலை மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் பட்டிணங்கள் பிரதேச செயலக பிரிவு பகுதி தொல்பொருள் மரபுரிமைக்கு சொந்தமானது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ‘ஆராயம’ ஒன்றை நிர்மாணிப்பதற்கு 60 பேச்சர்ஸ் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வெல்கம விகாரையின் விகாராதிபதி சீலவங்ச திஸ்ஸ தேரருக்கு இந்த காணி வழங்கப்பட்டுள்ளது.இந்த காணியை தூய்மைப்படுத்தி அங்கு வசிப்பதற்கு தேரர் சென்ற போது தமிழர்களில் ஒருசிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சீலவங்ச திஸ்ஸ தேரர் அந்த காணிக்குள் உட்பிரவேசிப்பதற்கும், அங்கு வசிப்பதற்கும் தடையுத்தரவு விதிக்குமாறு நகரம் மற்றும் பட்டிணங்கள் பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு தடையுத்தரவு விதிக்க மாகாண ஆளுநருக்கும் பிரதேச செயலாளருக்கும் அதிகாரம் கிடையாது.சட்ட ரீதியில் வழங்கப்பட்டுள்ள காணிக்குள் உட்பிரவேசிப்பதை தடுப்பது சட்டவிரோதமானது.இப்பகுதியில் வாழும் தமிழர்களும், தமிழ் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. உயர்மட்டத்தில் இருந்துக் கொண்டு செயற்படும் ஒரு நபரின் சூழ்ச்சியின் ஊடாகவே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.ஆகவே மாகாண ஆளுநருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வருமாறு பதிலளித்தார்.

கேள்வி ; பொரலுகந்த ரஜமஹா விகாரைக்கு சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விகாரை பகுதிக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர் மற்றும் பிரதேச செயலாளருக்கு உள்ளதா?

பதில் ; பொரலுகந்த விகாரை 13-15- 024 என்ற இலக்கத்தின் கீழ் புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆகவே விகாரை மற்றும் அப்பகுதிக்கு எவரும் செல்லவாம் தடையேதுமில்லை.

கேள்வி ; இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா?

பதில் ; பொரலுகந்த ரஜமஹா விகாரை மற்றும் போராட்டம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அதிபர், நகரம் மற்றும் பட்டிணங்கள் பிரதேச சபையின் செயலாளர் ஆகிய தரப்பினர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கேள்வி ; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுவதை அரசாங்கம் அறிந்துள்ளதா? அது தொடர்பான தகவல்கள் உள்ளதா?

பதில் ; ஆம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. நாளாந்தம் தகவல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி ; சட்டவிரோதமாக மாகாண ஆளுநர் வழங்கிய அறிவுறுத்தலை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?

பதில் ; இல்லை, பொரலுகந்த விகாரை பகுதிக்கு அந்த தேரர் செல்லலாம் அங்கு வசிக்கலாம் தடையேதும் இல்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.