நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக்கும்பல் ; வீட்டார் உரக்க கத்தியதால் தப்பியோட்டம் – யாழில் சம்பவம்

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்து கொள்ளையடித்துச் செல்ல முயற்சித்த கும்பல் வீட்டார் உரக்க சத்தமிட்டு கத்தியதால் தப்பியோடிய சம்பவம் நேற்று (25) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு நேரம் ஓட்டினை பிரித்துக்கொண்டு முகமூடி அணிந்த மூவர் அடங்கிய கொள்ளைக்கும்பல் வீடொன்றினுள் இறங்கியுள்ளது.

அந்த மூவரும் வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து, கழுத்தில் கத்தியை வைத்து ‘நகைகள் எங்கே?’ என மிரட்டி கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.

அவ்வேளை வீட்டின் உரிமையாளர் சத்தமாக கத்த, அயல் வீட்டினர் தமது வீட்டு மின் விளக்குகளை ஒளிரவிட்டுள்ளனர்.

அதனை அவதானித்த கொள்ளைக்கும்பல், தாம் கொண்டுவந்திருந்த பெரிய கத்தி ஒன்றினை அவ்வீட்டிலேயே கைவிட்டுவிட்டு  தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

அதேவேளை கடந்த வியாழக்கிழமை அதே  வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த முகமூடி கொள்ளைக்கும்பல், பாதிரியாரின் கழுத்துக்கு கத்தி வைத்து, பாதிரியாரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.