நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர்: தமிழர் உரிமையை பறிக்கும் செயலையே எதிர்க்கிறோம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்குகின்றார்

 

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உரிமை சகலருக்கும் உண்டு. இருப்பினும் நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக எமது மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடியவகையிலும், தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையே நிறுத்துமாறு கோருகின்றோம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெற்கில் அனுபவிக்கும் சுதந்திரத்தை தாம் வடக்கில் அனுபவிப்பதற்கு இடமளிக்கவேண்டுமென வலியுறுத்தி பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் அவரது கொழும்பு இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘எமது செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. அதேபோன்று தமது கருத்துக்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை சகலருக்கும் உண்டு. அதனை நாம் மறுதலிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அதேவேளை தாம் ஒருபோதும் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீண்டகாலமாக மதவழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அப்புறப்படுத்துமாறு தாம் கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், மாறாக எமது மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடியவகையிலும், தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையே நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம் எனக் குறிப்பிட்டார்.

‘தொல்பொருள் சின்னம் அல்லது பௌத்த சின்னம் என்ற பெயரில் தமிழ்மக்களின் அடையாளங்களையும் சரித்திரத்தையும் அழிப்பதற்கோ அல்லது மாற்றியமைப்பதற்கோ நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதனை முன்னிறுத்தியே நாம் செயற்பட்டுவருகின்றோம்’ என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது வேண்மென்றே இனவாதத்தைத் தூண்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், தமிழ்மக்கள் சார்பில் உண்மையிலேயே போராடுவதுடன் தமிழர்களின் வாழ்விடங்களில் முன்னெடுக்கப்படும் பௌத்த சிங்கள நிகழ்ச்சிநிரலை வெளிப்படையாகவே எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருப்பதாலேயே அவரது இல்லத்துக்கு முன்பாகப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.

முன்னர் பொலிஸார் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், இப்போது இத்தகைய போராட்டங்கள் மூலமும் ‘வீட்டை எரிப்போம்’ என்ற கோஷங்கள் ஊடாகவும் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.