யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியர், காவலாளிகளின் அடாவடியால் சேவைகளைப் பெற மக்களுக்கு நாட்டமில்லை! வேலணை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் பிரகலாதன் காட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதியர் மற்றும் காவலாளிகளின் அடாவடி நடவடிக்கைகளால் தான் யாழ்ப்பாண மக்கள் வைத்தியசாலையூடாக சேவைகளைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையுள்ளது என வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக வைசாளினி என்ற சிறுமி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட நிலையில்  இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமையைக் கண்டித்து வியாழக்கிழமை காலை போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கனூலா ஏற்றும் போது இரத்தம் வருவதாக தாய் தாதியரிடம் முறையிட்ட போதும் அவர் அசண்டையீனமாக இருந்துள்ளார். 27 ஆம் திகதி மருந்து ஏற்றப்பட்ட நிலையில் 2 ஆம் திகதி கை அகற்றப்பட்டுள்ளது.

குறித்த விடுதிக்குப் பொறுப்பான வைத்தியர்  சரபவணானந்தன் கூட உடனடியாக அவதானித்திருந்தால் கையைக் காப்பாற்றியிருக்கலாம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதியர் மற்றும் காவலாளிகளின் அடாவடி நடவடிக்கைகளால் தான் யாழ்ப்பாண மக்கள் வைத்தியசாலையூடாக சேவைகளைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையுள்ளது.

யுத்தத்தால் பல உயிரிழப்புகளையும்  அங்கவீன இழப்புக்களையும் சந்தித்த எமது மண்ணில் வைத்திய அசண்டையீனங்களால்  உயிர்கள் பலியாவதை அனுமதிக்கப் போவதில்லை.

குறிப்பாக தற்சமயம்  தீவக வைத்தியசாலையில் இடம்பெறும் இடர்பாடுகள் காரணமாக சிறிய நோய்களுக்கு மருந்துகளைப்  பெறுவதற்குக் கூட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையையே நாடும் நிலை காணப்படுகின்றது.

இதற்கு முன்னரும் நடைபெற்ற பல உயிரிழப்புக்களும்  அங்கவீனங்களாலும் பாதிக்கப்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குள் காணப்பட்டதாலும் சில சட்ட நுணுக்கங்களை அறிந்திராத காரணங்களாலும் பூசிமழுகப்பட்டன.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தும் இதுவரை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

தாதி  பணி நிறுத்தத்தின் பின்னரே விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். இங்கு மாறாக பணிக்காக வேறு விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இதேவேளை குறித்த சிறுமியின் பெற்றோரின் கையெழுத்துடனான கடிதம் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ளது.

எனவே, குறித்த விடயத்தில் நேரடியாக சம்பந்தப்படும் தாதியர் உட்பட ஏனையோருக்கெதிராக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.