சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்டநபர் யாழில் கைது
சமுர்த்தி உத்தியோகத்தரென தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வழிப்பறியில் ஈடுபட்டுவந்த நபர் புதன்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நபரொருவர் ஆள் நடமாட்டம் குறைவான இடங்களில் பயணிக்கும் முதியவர்களை மறித்து, தன்னை சமுர்த்தி உத்தியோகத்தராக அறிமுகப்படுத்திக்கொண்டு, உதவித் திட்டங்கள் வழங்கவுள்ளதாக அவர்களிடம் பேசத் தொடங்கி, சந்தர்ப்பம் பார்த்து, அவர்களின் நகைகள் உள்ளிட்ட உடைமைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறாக நான்கு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட 10 பவுண் நகைகளை அவரிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை