வன்னியில் மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு: மதுபானசாலைகளுக்கு அனுமதிகள் வழங்கல்! விநோநோகராதலிங்கம் சாடல்

வன்னியில் புதிதாக மருந்தகங்களை அமைக்க அனுமதி வழங்குமாறு பலமுறை வலியுறுத்தப்பட்டும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக புதிதாக பல மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் புதிதாக மதுபானசாலைகளை அமைப்பதால் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாட்டில் 20000 வைத்தியர்களில் 1500 பேர் நாட்டை விட்டு சென்றுள்ளதுடன் மேலும் 5000 பேர் வெளிநாடு செல்லத் தயாராகி வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பாடசாலைகள் மூடப்படுவதை போன்று வைத்தியசாலைகளும் மூடப்படுமா? என்று எண்ண வேண்டியுள்ளது. இவ்வாறு இவர்கள் வெளியேறி செல்ல அரசாங்கம்தான் காரணமென்றால் இதுவரையில் அரசாங்கம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்கின்றேன்.

அண்மையில் யாழ். வைத்தியசாலையில் 8 வயது சிறுமியொருவரின் கை அகற்றப்பட்டுள்ளது. அவர் காய்ச்சலுக்காக சென்றவர். வைத்தியர்கள், தாதிகள் விரக்தியில் இருப்பதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அரச வைத்தியசாலைக்கு நோயாளர்கள் செல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சுகாதார அமைச்சருக்காக மாத்திரமன்றி முழு அரசாங்கத்துக்கும் எதிராகவே கொண்டு வந்திருக்க வேண்டும்.

வன்னியில் மருந்தகங்களை அமைக்க சுகாதார தரப்பினரிடம் அனுமதி கோரியிருந்த போதும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆனால் வன்னியில் புதிதாக மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மதுபானசாலைகள் பலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களுக்கு இது வழங்கப்படுகின்றதா என்பது பிரச்சினையில்லை. ஆனால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேரத்தில் இவ்வாறு மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவது எதற்காக என்று கேட்கின்றேன்.

புதிதாக இவ்வாறு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கி அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கருதுகின்றோம். மக்களை படுகுழிக்குள் தள்ளிவிட்டு அரசியல்வாதிகளை மாத்திரம் முன்னேற்ற எடுக்கும் முயற்சிகள் மாற்றப்பட வேண்டும். இது மக்களுக்கான அரசாங்கமாக இருக்காது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைக்குழி தோண்டப்படுகிறது.சர்வதேச பரிமானங்களுக்கு அமைய அங்கு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய புதைகுழி தோண்டப்பட்டாலும்,நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.இதனை குருந்தூர் மலை விகாரை நிர்மாணிப்பு ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.