கிண்ணியாவில் குடிநீர் தட்டுப்பாடு! : பவுஸர் மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீரை பெற முண்டியடிக்கும் மக்கள்!

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் கடந்த மூன்று தினங்களாக குடிநீரின்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், இன்று சனிக்கிழமை (09) அப்பகுதியில் உள்ள மக்களுக்கு 6000 லீற்றர் கொள்ளளவு கொண்ட பவுஸர் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடான நீர்வெட்டு மூன்று நாட்கள் அமுலில் இருந்த நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்திக்கும் வகையில் இன்று கிண்ணியா நகர சபை ஊடாக பவுஸர் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் முறைப்பாட்டுக்கமைய, கிண்ணியா நகர சபை செயலாளரின் அதிரடி நடவடிக்கையால் பெரியாற்றுமுனை, பெரிய கிண்ணியா உட்பட பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு பவுஸர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் தம்பலகாமம் பகுதியில் திருத்த வேலைகள்  காரணமாக நீர் துண்டிக்கப்பட்டாலும் கூட உரிய நேரத்துக்கு நீர் வழங்க முடியாமல் போனதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்கள், பணிகளுக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட அப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிய நேரத்துக்கு பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

கிண்ணியாவில் தொடர்ந்தும் இந்த நிலை அடிக்கடி ஏற்படுவதுடன், அங்கு சீரான குடிநீர் விநியோக முறை இல்லாத காரணத்தாலும் அவதியுறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருட காலமாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடான நீர் விநியோகம் சீராக இயங்குவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நீர் கட்டணத்தை மாத்திரம் அதிகரித்துவிட்டு, நீர் விநியோகத்தை மந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அத்தோடு அடிக்கடி திருத்த வேலைகள், நீர் வெட்டு என மக்களை தொடர்ந்தும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். நீண்ட காலமாக இந்த பிரச்சினை தீர்வின்றி தொடர்கிறது.

எனவே, முன்னறிவித்தல் இன்றிய நீர்வெட்டு போன்றவற்றை கவனத்தில் கொண்டு சீரான குடி நீரினை தினமும் பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளிடத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.