விசேட பயிற்சி பெற்ற புதிய சுகாதார ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!

 

நூருல் ஹூதா உமர்

அண்மையில் கிழக்கு மாகாண சபையல் பலநோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் 161 பேருக்கான நான்கு நாள் விசேட பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும், கலை நிகழ்ச்சியும் சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு தலைமையுரை நிகழ்த்திய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தனதுரையில் நோயாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது முதல் சுகாதாரத் துறையின் பல்வேறு விடயங்களையும், நேர முகாமைத்துவத்தையும், சுகாதார பணியின் மாண்பையும் கற்றுக்கொண்ட நீங்கள் தொடர்ந்தும் உங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். நாட்டினுடைய பொருளாதார சிக்கல் நிறைந்த இந்த காலகட்டத்தில் இலங்கையில் எங்குமில்லாது இப்படியான ஒரு பணியை கல்முனை பிராந்திய காரியாலயம் செய்திருப்பது எல்லோருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. – என்றார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர், அரசியலுக்காக இனவாதம், மதவாதம் பேசுபவர்களை தோற்கடித்து இங்கு பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 101 தமிழ் மொழி பேசுபவர்களும், 60 சிங்கள மொழி பேசுவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரச பணம் பல்வேறு தேவைகளுக்காக வீணடிக்கப்படும் இன்றைய நிலையில் அரசுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் உங்கள் பணியை முன்னெடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம்.வாஜித், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர், பிரிவுத்தலைவர்கள் உட்பட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.