உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த சி.ஐ.டி. மற்றும் ரி.ஐ,டி. யின் முன்னாள் பிரதானிகளுக்கு இடமளிக்க வேண்டும் – ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தேர்தல் வெற்றி ஒன்றை இலக்குவைத்து, நீண்டகாலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பது வெளிப்பட்டுள்ள சம்பவங்கள் மூலம் ஊகித்துக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன் குற்றப்புலனாய்வு துறை மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் பிரதானிகள் வெளியில் வந்து உண்மையை தெரிவித்தால் இது இன்னும் கடுமையான போக்குக்கு செல்ல இடமிருக்கிறது. அதற்கும் நாங்கள் இடமளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்தியிருக்கும் தகவல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்தியிருக்கும் புதிய தகவல்கள் மூலம் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்பட்டிருக்கிறது.

இந்த வெளிப்படுத்தல்கள் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தலையிடாமல், குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி இருப்பவர்கள் அது தொடர்பில் தங்களின் நியாயத்தை தெரிவிப்பதே நல்லது என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

அத்துடன் சனல் 4 வெளிப்படுத்தி இருக்கும் தகவல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயார் எனவும் அதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் அரசாங்கத்தின் முக்கியமான நிறுவனங்களுக்கு குற்றச்சாட்டு தெரிவிப்பதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது என்றவகையில் மேலும் ஒரு அமைச்சர் எச்சரிக்கும் வகையில் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் இந்த சம்பவத்தின் உண்மை நிலை வெளிப்படுவதை தடுக்கவேண்டும். அவ்வாறு தடுக்காவிட்டால், அது அரச ரகசியங்கள் வெளிபடுவதற்கு தூண்டுதலாக அமையும். இதன் மூலம் ஒட்டுமொத்த அரச பொறிமுறையும் பலவீனப்படும் என்ற வகையில் தெரிவித்திருந்தார். அரசாங்கத்தின் சிலர் உண்மை வெளிவருவதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

மேலும் நாடு தொடர்பில் எங்களுக்கும் கரிசனை இருக்கிறது. என்றாலும் தேசப்பிரேமிகள் என்ற போர்வையில் மறைந்து அப்பாவி மக்களை கொடூரமான முறையில் கொலை செய்த திரிபோலி குண்டர்களாக செயற்பட்ட அவர்களுக்கு ஆயுத குழுவொன்றுக்கு தலைமைத்துவம் வழங்கிய அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதும் தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

இதன் உண்மையை நாங்கள் தேடவேண்டும். யாரும் இதனை மறைக்க முடியாது. குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ஈடு வழங்குவது மாத்திரமல்லாது, இதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களின் உள்ளம் அமைதியடையச்செய்ய வேண்டும்.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொண்ட குண்டர்கள், அவர்களை பயன்படுத்திக்கொண்டு அரசியல் நோக்கத்துக்காக செயற்பட்டவர்கள் தொடர்பான உண்மைகளை நாங்கள் வெளிப்படுத்தவேண்டும்.

இதன் மூலம் நாட்டின் முக்கிய நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிப்பதாக அர்த்தம் கற்பிக்க முடியாது. என்றாலும் சர்வதேசத்துக்கு முன்னால் உண்மையை வெளிப்படுத்தும் கடப்பாடு அனைவருக்கும் இருக்கிறது. அதேபோன்று இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என குற்றச்சாட்டு தெரிவிக்கும்போது நாங்கள் மிகவும் பொறுப்புடனும் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் செயற்பட வேண்டும்.

இந்த தாக்குதல் சம்பவம் தேர்தல் வெற்றி ஒன்றை இலக்குவைத்து, நீண்டகாலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பது வெளிப்பட்டுள்ள சம்பவங்கள் மூலம் ஊகித்துக்கொள்ள முடியுமாகிறது.அத்துடன் குற்றப்புலனாய்வு துறை மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் அதிகாரிகள் வெளியிலிவந்து உண்மையை தெரிவித்தால் இது இன்னும் கடுமையான போக்குக்கு செல்ல இடமிருக்கிறது.

அதற்கும் நாங்கள் இடமளிக்கவேண்டும். சட்டத்தை மதித்து செயற்பட்ட பல அதிகாரிகள் உண்மையை தெரிவிப்பதற்கு முன்வர இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.