கஹவத்தை சம்பவத்திற்கு அமைச்சர் ஜீவன் கடும் கண்டனம் : உடனடியாக வீட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை !

கஹவத்தை சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் உடனடியாக அவர்களுக்கு வீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில உள்ள மாணவிக்கு முழுமையான புலமைபரிசில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் குறித்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தில் அதிகாரியாக நியமனம் வழங்க நடவடிக்கையையும் எடுத்துள்ளார்.

 

இரத்தினபுரி – கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தினால் ஞாயிற்றுக்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு தகர்க்கப்பட்டது.

இதனையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்திற்கு கடும் தொனியில் எச்சரித்தார்.

இந்த நடவடிக்கை தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்திற்கும் உடன் கொண்டு சென்றார்.

இந்த மனிதாபிமானமற்ற முறையில் நடந்துக் கொண்ட தோட்ட முகாமைத்துவத்தை வன்மையாக கண்டித்ததுடன், உடனடியாக அவர்களுக்கு வீட்டை பெற்றுத்தரவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயில உள்ள மாணவிக்கு முழுமையான புலமைபரிசில் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தில் அதிகாரியாக நியமனம் ஒன்று வழங்கவும் உத்தரவிட்டார்.

இதற்கு இணங்கிய பெருந்தோட்டயாக்கம், அவர்களுக்கு உடன் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், இவ்வாண்டு வரவு – செலவு திட்டத்திற்கு பின் இரத்தினபுரி மாவட்டத்திற்கு அதிகப்படியான வீடுகளை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு ஆலோசனை வழங்கியதோடு, அது மட்டுமல்லாது குறித்த தோட்டத்திற்கு மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கும் நடடிவடிக்கை எடுக்குமாறு மேற்படி நிதியத்திற்கு மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது, அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் ராஜமணி, இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் குமார், அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் என பலரும் இந்த சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கு அவர்களுக்காக துணை நிற்பதாக இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.