காதல் விவகாரம் : வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் ; யுவதி உள்ளிட்ட ஐவர் காயம்

யாழ்ப்பாணத்தில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் சனிக்கிழமை பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் ஜன்னல்கள் , கதவுகள் என்பவற்றையும் அடித்து உடைத்து , வீட்டில் இருந்தவர்கள் மீதும் இளைஞன் ஒருவரின் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவத்தில் வீட்டில் இருந்த யுவதி ஒருவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் பகுதியில் உள்ள இளைஞன் ஒருவரின் தலைமையில் வந்த கும்பலே தாக்குதல் மேற்கொண்டதாகவும் , காதல் விவகாரமே தாக்குதலுக்கு காரணம் எனவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட இளைஞனை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவரையும் , அவருடன் , தாக்குதலுக்கு வந்த ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.