மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் கல்முனையில்!

நூருல் ஹூதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார சேவை நிறுவனங்களின் மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் வியாழக்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய மருந்தாளர் திருமதி தர்ஷினி இந்திரக்குமார் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

பணிப்பாளர் சார்பில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கணக்காளர் உசைனா பாரிஸ், தொற்று நோய்த்தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ சீ.எம்.பஸால், தொற்றா நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஸாத், பாலியல் தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என்.எம்.தில்ஷான் உள்ளிட்ட பிரிவுத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மருந்துகள் வீணாகுதலை தவிர்த்து செயற்றிறன் மிக்க மருந்து முகாமைத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக மருந்துகள் விநியோகம் மருந்து தட்டுப்பாடு மற்றும் குறைபாடு, மருந்து கொள்வனவு என்பனவற்றுடன் மருந்தாளர், மருந்து கலவையாளர் ஆளணி தொடர்பாகவும் மருத்துவ உபகரணங்கள் மருந்து களஞ்சிய மீள் திருத்த வேலைகள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மருந்தாளர்கள், மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள், பொதுச் சுகாதார தாதியர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.