குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருள்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான இறங்குதுறையாக குறிகாட்டுவான் இறங்கு துறையே உள்ளது.

தற்போது குறிகாட்டுவான் இறங்கு துறை சேதமடைந்துள்ளமையால், கனரக வாகனங்கள் இறங்குதுறைக்கு அண்மித்த பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் கனரக வாகனங்களில் நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்படும் , அத்தியாவசிய பொருள்கள் உட்பட கட்டட பொருள்களான மணல் , கம்பி , சீமெந்து ஆகியவை இறங்கு துறைக்கு சற்று தொலைவில் இறங்கி அங்கிருந்து மனித வலுவை பயன்படுத்தி தூக்கி சென்று படகுகளில் ஏற்ற வேண்டிய நிலைமை காணப்படுகிறது. அதனால் பொருள்களைக் கொண்டு செல்வோர் அதிக சிரமங்களை எதிர்கொள்வதுடன் அதிகளவான கூலியும் வழங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.

அதேவேளை குறிகாட்டுவான் – நயினாதீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த ‘கடற்பாதை’ மிக மோசமாக பழுதடைந்துள்ளமையால் அதன் சேவையும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளமையால் , நயினாதீவுக்கு பொருளடகளை எடுத்து செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நயினாதீவு நாக பூசணி அம்மன் மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு அதிகளவான யாத்திரியர்கள் தினமும் செல்வதால் ,பயணிகள் படகு சேவையில் பொருள்களை அதிகளவில் ஏற்ற முடியாத நிலைமை காணப்படுவதால் , நயினாதீவுக்கு பொருள்களைக் கொண்டு செல்வோர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

அதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் பாலத்தையும் , கடற்பாதையை புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.