மன்னார் தேசிய மீலாத்துன் நபி விழா பின்போடப்பட்டது காதர் மஸ்தான் தெரிவிப்பு

தேசிய மீலாத்துன் நபி விழா எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடாக இருந்தபோதும் அன்றைய தினம் ஜனாதிபதி நாட்டில் இருக்க மாட்டார் என்பதாலேயே இது பின்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இதில் கட்டாயம் கலந்துகொள்ள இருப்பதால் அவர் திகதியைக் குறிப்பிட்ட பின்னர் நிகழ்வுத் திகதி குறித்து அறிவிக்கப்படும் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் தேசிய மீலாத்துன் நபி தின விழா இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் முசலி செயலகப் பிரிவில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததுக்கு அமைவாக இதற்கான ஆயத்த முன்னேற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

இது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் பங்கேற்போடு இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் –

மன்னாரில் இந்த விழாவை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடாக இதன் ஏற்பாட்டுக் குழு மற்றும் இதன் சார்ந்த திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளோம்.

இதில் இது சம்பந்தமான கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் இதன் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.

மாவட்ட மக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த மீலாத்துன் நபி விழா எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடாக இருந்தபோதும் அன்றைய தினம் ஜனாதிபதி நாட்டில் இருக்க மாட்டார் என்பதாலேயே இது பிற்போடப்பட்டுள்ளது.

இவ்விழா எதிர்வரும் மாதம் (ஒக்ரோபர்) முதல் அல்லது இரண்டாவது கிழமையே நடத்துவதற்கு தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இதில் கட்டாயம் கலந்துகொள்ள இருப்பதால் அவர் திகதியை குறிப்பிட்ட பின்னர் இது அறிவிக்கப்படும். – என்றார்.

நாட்டில் பொருளாதார கஷ்டம் இருக்கின்றபோதும் இவ்விழாவுக்காக 11.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பல அமைப்புக்கள் மற்றும் திணைக்களங்களினூடாக பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இப் பகுதி மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிலாவத்துறை ரவுண்ட போட் அமைப்பதற்காக 84 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சர் பந்துல்ல குணரெட்ண அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து நிற்கின்றோம்.

அத்துடன் விழா நடைபெற இருக்கும் சிலாவத்துறை முஸ்லிம் வித்தியாலய பாடசாலை வீதி தற்பொழுது புனரமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசு சார்பற்ற நிறுவனம் ஐ.எஸ்.ஆர்.சி 125 வீதிகள் அமைப்பதற்கும் முன்வந்துள்ளது. இதற்கான அடிக்கல்லும் அன்று நாட்டப்பட இருக்கின்றன.

இவ்விழாவை முன்னிட்டு இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு ஒரு வருடத்துக்கு மன்னார் மாவட்டத்துக்கான அபிவிருத்தி வேலைகளை பல அமைச்சுக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நகர அபிவிருத்தி சபையுடன் பேச்சு நடத்தி மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி திட்டங்களை இதன் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இதன் மூலம் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு நகரத்தை  அபிவிருத்தி செய்து நவீனப்படுத்தவே இதன் ஏற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது. – எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.