15 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தனர்! ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டு

ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். எனவே சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

உயிர்த்த ஞாயிறு தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்வதில் ஆளும் கட்சிக்கு இருக்கும் கொள்கைகளுக்கும் எதிர்க்கட்சிக்கு இருக்கும் கொள்கைகளுக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது.

எதிர்க்கட்சியின் கொள்கையிலேயே இந்த நாட்டில் அதிகமானோர் இருக்கின்றார்கள். அதனால்  இந்த உண்மைகளை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்தத் தாக்குதலால்  சுமார் 15 நாடுகளின் பிரஜைகள் உயிரிழந்திருக்கின்றார்கள். ஆகவே சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் பொதுவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எதிர்கட்சியினர் இராணுவத்தினருக்கு சேறு பூச நினைக்கின்றார்கள் என்று பலரும் கூறுகின்றார்கள். அவ்வாறு எதுவும் இல்லை. கடந்த பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகாவுக்கு அருகில் தான் அமர்கின்றேன். தனிப்பட்ட ரீதியிலும் அவர் எனக்கு பல விடயங்களைக் கூறியிருக்கின்றார்.

வருடக்கணக்காக இடம்பெற்ற யுத்தத்தில் போராடி முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை குறை சொல்வதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை. ஆனாலும் சில நபர்கள் குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளன. ஆகவே இது தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரிய தேவை ஒன்று இருக்கின்றது. – இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.