மன்னாரில் மீன் வாடியிலிருந்து திருடப்பட்டுள்ள 9 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் மீட்பு!  திருடியவர் கைது

மன்னார் பள்ளிமுனை மீனவர் ஒருவரின் மீன் வாடியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சுமார் 9 லட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி மீன்பிடி உபகரணங்களை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கற்பிட்டியில் வைத்து மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வாடி, பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

குறித்த மீன்பிடி வாடியில் கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த நபர் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் சில தினங்களுக்கு முன் மீன் வாடியில் வைக்கப்பட்டிருந்த படகுகளின் 2 வெளி இணைப்பு இயந்திரங்கள் (எஞ்சின்), அட்டை பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உட்பட சுமார் 9 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களைத் திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, வாடியின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பின்னர், மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரணுக்க விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பொருள்களைத் திருடிய நபர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவர் திருடி விற்பனை செய்த பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட பொருள்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.