சிறுவர்களுக்கான மென்பந்து கிறிகெட்டில் திருமலை ஆண் அணியினர் சம்பியனானது!

 

அபு அலா –

உலக சிறுவர் தினத்தையொட்டி கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான மென்பந்து கிறிகெட் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபிஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டிக்கு கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் (திருமதி) ஆர்.றிஸ்வானி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் பி.மதனவாசகன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொன்டு சிறப்பித்தனர்.

இந்த கிறிகெட் சுற்றுப்போட்டியில், கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்கள் பங்குபற்றினர்.

மாவட்ட ரீதியாக நடைபெற்ற மென்பந்து கிறிகெட் சுற்றுப் போட்டிகளில் தெரிவாகியவர்களை மாகாண மட்டத்தில் கலந்துகொள்ள வைக்கும் நோக்கில் இடம்பெற்ற இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 3 அணியினரும், பெண்கள் பிரிவில் 3 அணியினரும் இந்தப் போட்டியில் பங்குபற்றினர்.

அணிக்கு 11 பேர் கொண்ட இந்தச் சுற்றுப்போட்டி, 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அமைந்தது. இதில் திருகோணமலை மாவட்ட ஆண்கள் அணியினர் வெற்றிபெற்றனர். பெண்கள் அணியில் மூன்று மாவட்ட அணியினரும் கூட்டு வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் வெற்றிபெற்ற பெண்கள் அணியினருக்கான கூட்டு கிண்ணத்தை கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி ஆர்.றிஸ்வானியும், ஆண்களுக்கான சம்பியன் கிண்ணத்தை கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

மாகாண மட்ட இறுதிப் போட்டிக்காக நடத்தப்பட்ட கிறிகெட் சுற்றுப்போட்டிக்கு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் அனுசரனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.