மக்கள்மீது தொடர்ந்து வரி விதிக்கும் கொள்கைத் திட்டம் அரசிடம் இல்லை நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் கூறுகிறார்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக ஊழியர் மட்ட பேச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் மீது தொடர்ந்து வரி விதிக்கும் கொள்கை கிடையாது. ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வது குறித்து நாணய நிதியத்துடன் பேச்சில் ஈடுபட்டுள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இருபத்தேழு இரண்டின் கீழ்  முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட முதல் தவணை நிதியம் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது.

இரண்டாம் தவணை நிதியை பெற்றுக்கொள்வதற்கு தற்போது இரு மற்றும் பல்தரப்பு பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் தான் 2022.05.01 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.இதற்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம்  ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. சர்வதேச நாணய நிதியம்  முன்வைத்த முதல் கட்ட 51 நிபந்தனைகளில் 47 நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளோம்.

நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு பல கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடாளுமன்றத்தின் ஊடாக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நாணய நிதியத்துடனான பேச்சுகளை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு  ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்றதையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் தவணை நிதியுதவி வழங்கலை நாணய நிதியம் இடைநிறுத்தியுள்ளதாகக் குறிப்படப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிறைவடைந்த 9 மாத காலத்தில் அரச வருமானம் 43.5 சதவீதமாக உயர்வடைந்துள்ள போதும் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட அரச வருமான இலக்கை அடைய முடியவில்லை.

பொருளாதார மீட்சிக்கு பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 1.3 ஆகக் குறைவடைந்துள்ளது.

அதே போல்  உணவல்லாத பணவீக்கம் -5 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. இந்த ஆண்டுக்குள் பணவீக்கத்தை நிலையான தன்மைக்குக் கொண்டு வர  உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

வெளிநாட்டு கையிறுப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக வாகன இறக்குமதி தற்காலிகமாக  தடை செய்யப்பட்டது. எதிர்வரும் வாரமளவில் தனியாள் பாவனை வாகன இறக்குமதியை தவிர்த்து வணிக வாகன இறக்குமதி மீதான தடையைத் தளர்த்த  உத்தேசித்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக ஊழியர் மட்ட பேச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் மீது தொடர்ந்து வரி விதிக்கும் கொள்கை கிடையாது. ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வது குறித்து நாணய  நிதியத்துடன்  பேச்சில் ஈடுபடவுள்ளோம்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா ,ஜப்பான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.