இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானைவேலி முல்லைத்தீவில் அறிமுகம்!

இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகனின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட யானை பாதுகாப்பு வேலி (தொங்குவேலி) இலங்கையில் முதல் முறையாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையை யானையில் இருந்து பாதுகாப்பதற்காக  அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 10 லட்சம் ரூபா செலவில் இந்த யானை பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழத்தின் போராசிரியர் காமினி செனநாயக்கா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் மங்களேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தைச் சூழ அமைக்கப்பட்ட யானை வேலியை வைபவ ரீதியாகத் திறந்து வைத்துள்ளார்கள்.

இரண்டு கிலோமீற்றர் நீளம் கொண்டு இந்த யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிராம அலுவலகர், பாடசாலை சமூகம் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன், நிகழ்வில் யானை மனித மோதல், அதில் இருந்து மனிதர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, யானைகளை எவ்வாறு பாதுகாப்பது போன்ற விடயங்கள், கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த யானை வேலிகளை யானைகள் எவ்வாறு உடைத்து சேதப்படுத்தி உள்நுளைந்தன. புதிதாக வடிவமைக்கப்பட்ட தொங்கு வேலி பரீட்சித்து பார்த்தபோது அதனால் யானைகள் உள்நுளையாமல் இருக்கின்றமை போன்ற விளக்கங்கள் காட்சிகள் ஆதாரங்கள் மூலம் கலாநிதி விஜயமோகனால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.