யாழில் பிறந்தநாள் கொண்டாடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்ய உத்தரவு!

யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மத்திய பஸ் நிலையத்துக்கு 50 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

யாழ்.நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள்.இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமைக்கு பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.

அதனை அடுத்து  சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி  பிறந்தநாள் கொண்டாடி , மக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரை கைது செய்து சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.

அவர்களை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், சம்பவத்துடன் தொடர்புடைய பிறந்தநாள் கொண்டாடிய நபர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என பொலிஸாருக்குப் பணித்துள்ளார்.

அதனை அடுத்து பொலிஸார் அனைவரையும் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.