சீனாவின் திட்டங்களிற்கு ஆதரவளிக்கின்றாரா பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்? வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்கள்; இந்தோ பசுபிக்கில் சீனா ஆழமாக காலடி பதிப்பதற்கு உதவலாம் என்ற  கரிசனைகளுக்கு மத்தியில் இலங்கையில் சீனா நிதியுதவி உடனான துறைமுகநகரத்தை ஊக்குவித்தமைக்காக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகநகரத்துக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் அந்தத் திட்டம் குறித்து உரையாற்றுவதற்காக செப்ரெம்பர் மாதம் டேவிட் கமரூன் மத்தியகிழக்கிற்கு சென்றார் என பொலிட்டிக்கோ தெரிவித்துள்ளது.

சீனாவின் சர்வதேச உட்கட்டமைப்பு திட்டமாக புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய பகுதி இந்த கொழும்பு துறைமுக நகரம். சிங்கப்பூருக்கு போட்டியாக இது உருவாக்கப்படுகின்றது என்ற கருத்தும் உள்ளது.

கொழும்புதுறைமுக நகரத்தின் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே டேவிட்கமரூன் இணைத்துக்கொள்ளப்பட்டார் என இலங்கையின் முதலீட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் டிலும் அமுனுகம பொலிட்டிக்கோவிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிட்டிக்கோ மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

டேவிட் கமரூன் இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றியிருந்தார் அபுதாபியில் அவர் கலந்துகொண்ட நிகழ்வில் 100 பேர் கலந்துகொண்டிருந்தனர். டுபாயில் அவரின் நிகழ்வில் 300 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இது முற்றுமுழுதாக சீனாவின் திட்டமில்லை – இது இலங்கையின் திட்டம் என்பதை டேவிட்கமரூன் வலியுறுத்த முனைந்தார் எனத் தெரிவித்துள்ள திலிம் அமுனுகம  சீனாவும் அவர் அதனையே வலியுறுத்தவேண்டும் என விரும்பியிருக்கலாம் என கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் கமரூனை உள்வாங்குவது குறித்து சீன நிறுவனமே தீர்மானித்தது இலங்கை அரசாங்கம் இல்லை எனவும் இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமருக்கு சீனாவுடன் நேரடிதொடர்பில்லை கொழும்புதுறைமுகநகரத்துக்கு நிதி வழங்கும் நிறுவனத்துடனும் தொடர்பில்லை என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டேவிட் கமரூனை அமெரிக்காவை தளமாக கொண்ட வோசிங்டன் பேச்சாளர்கள் பணியகம் என்ற அமைப்பே ஏற்பாடு செய்தது என்று அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கேபிஎம்ஜி நிறுவனமும் இந்த நிகழ்வுடன் தொடர்புபட்டிருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பின்னரே டேவிட்கமரூனும் இந்த விடயத்தில் ஈடுபாட்டை காட்டினார் என டேவிட் கமரூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பில் கமரூன் சீன அரசாங்கத்துடனேயோ அல்லது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்துடனேயோ தொடர்புபட்டிருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகரத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது எனத் தெரிவித்துள்ள அவரது பேச்சாளர் உரைக்காக டேவிட் கமரூனிற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க மறுத்துள்ளார்.

பிரிட்டனின் முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் டங்கன் ஸ்மித் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கும் சமூக அபிவிருத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

புதியபட்டுபாதை திட்டம் நாடுகளை சீனாவின் கைதிகளாக்குகின்றது எங்கள் அனைவருக்கும் சீனா ஆபத்தான நாடு என்பதால் டேவிட் கமரூன் இதனை தெரிவு செய்திருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தவறான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.