பலஸ்தீன- இஸ்ரேல் மோதல் முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

கடந்த 7 ஒக்டோபர் 2023 இல் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலுடன் மீளவும் புதுப்பிக்கப்பட்ட பலஸ்தீன- இஸ்ரேல் யுத்தமானது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களை இருதரப்பிலும் மனிதாபிமானமற்ற முறையில் காவுகொண்டபடி முடிவற்று நீண்டுகொண்டிருப்பதையிட்டு நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம்.

எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்படமுடியாத ஹமாஸ் இயக்கத்தின் ஏவுகணை தாக்குதல்களை கண்டிக்கும் அதேவேளை, அப்பாவி பாலஸ்தீனியர்கள்மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் போரும், அதன் விளைவான உயிர்பலிகளும் காயங்களும் காட்டாய இடப்பெயர்வும் நாகரீகமடைந்த எந்தவொரு சக்தியாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காஸா என்ற திறந்தவெளி சிறையில் பல பத்தாண்டுகள் சொல்லொணா துயரத்தில் வாடும் பலஸ்தீனியர்கள் மீது அண்மைய தாக்குதலின் தொடர்ச்சியாக திணிக்கப்பட்டிருக்கும் தடைகள், அவர்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுவதோடு  அங்கே  வசிக்கக்கூடிய இரண்டு மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டவர்களை உணவு, நீர், மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட அடையமுடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது.

தொடர்ச்சியான விமான-ஏவுகணைத் தாக்குதல்கள் வசிப்பிடங்களையும் ஏலவே பற்றாக்குறையால் வாடும் மருத்துவமனைகளையும் தொடர்ந்தும் இலக்குவைத்திருப்பது ஒரு மாபெரும் மனிதப்பேரழிவைநோக்கி பலஸ்தீனிய பொதுமக்களை இட்டுச்செல்வதையிட்டு நாங்கள் வருத்தமடைகிறோம்.

போரின் மூலம் நிலைத்திருக்கக்கூடிய தீர்வுகளை எட்டமுடியாது என்ற பட்டறிவின் அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்படட இரு தரப்பும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது கட்டாயமாகும். அதேவேளை சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளித்து இருதரப்பிலும் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அரைநூற்றாண்டுகள் கடந்தும் முடிவுறாது தொடரும் பலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனைக்கு பொருத்தமான தீர்வொன்றினை சர்வதேச சமூகம் தாமாதிக்காது பெற்றுக்கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் மீளவும் ஒரு மனிதப்பேரவலம் ஏற்படாதவாறு தடுக்கும் பாரிய பொறுப்பு  சர்வதேச சமூகதிற்கு இருக்கின்றது என்பதை நாங்கள் நினைவுறுத்துகிறோம்.

ஒரு சிறு நிலப்பரப்பில் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கக்கூடிய மேற்படி போரானது அழிவுகளை தவிர வேறொன்றையும் விட்டுசெல்லப்போவதில்லை என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். பொருத்தமான உடனடி நடவடிக்கைகளின் மூலம் வளைகுடாவில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துமாறு சம்பந்தப்படட அனைவரையும் வலியுறுத்துகிறோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.