40 லட்சம் ரூபா ஐஸ் போதைப் பொருளுடன் உள்ளூர் விற்பனை முகவர் மன்னாரில் கைது!

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரிடம் இருந்து போதை பொருளைக் கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஐஸ் வகை போதை பொருளும் திங்கட்கிழமை காலை 11.45 மணி அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார், புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி, தாராபுரம் உட்பட்ட பல பகுதியில் நீண்ட காலமாக போதை பொருள் விற்பனையாளராகவும் விற்பனை முகவராகவும் செயற்பட்ட குறித்த நபர் மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பில்  திங்கட்கிழமை மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி விபுர்த்திக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத்தின் ஆலோசனையின் பெயரில் குற்றப்புலனாய்வு பிரிவு சார்ஜன் ரத்ண மனல தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதை பொருள் விற்பனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் போதை பொருளை கொள்வனவு செய்த வரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 மற்றும் 20 வயதுடைய நபர்கள் என்பதுடன் புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு அருகில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட நபர்களிடம் இருந்து 21 கிராம் 9 மில்லி கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம் மற்றும் 2 கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பிரதான சந்தேக நபருக்கு ஒரு கிலோ ஐஸ் போதை பொருள் விற்பனைக்காக வந்த நிலையில் 21 கிராம் போதைப்பொருள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மிகுதி போதைப் பொருள்களைத் தேடும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.