வாதப்பிரதிவாதங்களை நிறுத்தாவிடின் கிரிக்கெட் போல் மாறும் நாடாளுமன்று! பிரசன்ன ரணதுங்கவுக்கு பிரதி சபாநாயகர் தெரிவிப்பு

கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்த நிலையில், இந்த வாதத்தை இத்துடன் நிறுத்துங்கள். இல்லாவிடின் நாடாளுமன்றமும் கிரிக்கெட் போல் மாறிவிடும் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கிரிக்கெட்  நிர்வாக சபை கலைக்கப்பட்டதற்கு மக்கள் ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட் இடைக்கால குழுவை நியமித்தது சரியா? தவறா என்பதை ஆராய அமைச்சரவையில் எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை என அரச தரப்பின் பிரதான கொறடாவும் அமைச்சருமான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,  இலங்கை கிரிக்கட் குறித்து  நான் கருத்து வெளியிட்டேன். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு விதிக்கப்பபட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டுக்கு இப்படி பயணிக்க முடியாதல்லவா? இந்த அரசாங்கத்திற்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஒரு பக்கத்தில் இழுத்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு தீர்மானத்தை மேற்கொள்கிறார். அந்த அதிகாரம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உள்ளது. அதற்கு அமைவாகவே அவர் செயற்படுகின்றார்.

இடைக்கால குழுவுக்குள் பிரச்சினைகள் காணப்படலாம். அது வேறு கதை. ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டப்படி நடந்துள்ளார். இப்படி இருந்தால் எதிர்காலத்தில் கிரிக்கெட்டை எமது நாட்டில் எப்படி கொண்டு செல்ல முடியும்? இது குறித்து எங்களுக்கு ஓர் அறிக்கை தேவை. – என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிவிப்பேன். – என்றார்.

இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய  ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சித் தலைவர்  நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்மானம் குறித்துப் பேசினார். அந்த நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி நான் பேசவில்லை. கிரிக்கெட் நிர்வாக சபை கலைக்கப்படுவதற்கு மக்கள் ஆதரவு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் பற்றி நாங்கள் பேசவில்லை. இது குறித்து அமைச்சரவை கூட்டத்திலும் உரையாடப்பட்டது. இது குறித்து ஜனாதிபதியும் அமைச்சரும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்.  மற்றபடி அமைச்சர் எடுத்த முடிவு சரியா தவறா என்பதை கண்டறிய எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை. – என்றார்.

இதன் போது  எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான  லக்ஷ்மன் கிரியெல்ல,  நான் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் சிறிது காலம் பதவியில் இருந்தேன். விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளது. வேறு யாராலும் முடியாது. அமைச்சராக இடைக்கால குழுவையும் நியமித்தேன். இடைக்கால குழு பணியாற்றிய போது நாங்கள் சம்பியன் பட்டத்தை வென்றோம்.

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல்வாதிகள் தலையிடுவதாக இன்று சர்வதேச சமூகம் கூறுகின்றது. அர்ஜுனவால் மட்டுமே கிரிக்கெட்டை மீளக் கட்டி எழுப்ப முடியும். மக்கள் அதனை நம்புகிறார்கள். இந்த இடைக்கால குழு குறித்து ஆராய அமைச்சரவை தனி குழுவை நியமித்தது. – என்றார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ,  அமைச்சர் இது குறித்து விளக்கம் அளித்தார். இனி இதை நிறுத்துவோம். இல்லாவிட்டால் நாடாளுமன்றமும் கிரிக்கெட் நிர்வாக சபை போல் மாறிவிடும். – என்றார். இதன்போது சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.

மீண்டும் எழுந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசுகிறேன். இந்த நாட்டில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்க உங்கள் தந்தை பெரும் பணி செய்தார். கிரிக்கட்டை இந்த நிலைக்கு கொண்டு வர  முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்க பெரும் தியாகத்தை செய்தார். இங்கு தவறு அரசியல் தலையீடு அல்ல. தவறானவர்களை பதவியில் அமர்த்துவதுதான் தவறு.

கலாநிதி என்.எம்.பெரேரா காலத்திலிருந்து பல அரசியல்வாதிகள் விளையாட்டைக் காப்பாற்ற தியாகங்களைச் செய்தனர். ஆனால் உலகக் கோப்பைக்குப் பிறகு நாட்டில் பணம் புழங்கத் தொடங்கியபோது, சூதாட்டக்காரர்கள், திருடர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் விளையாட்டிற்குள் வந்தனர். நானும் அங்கு இருந்ததால் மற்ற திருட்டுகள் பற்றி எனக்கு தெரியும். இன்று நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு அரசு எடுத்த முடிவு அல்ல. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.