முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்கக்கோரி இராணுவ முகாமுக்கு முன் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்கக் கோரி, இன்று (11) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு இடவசதியின்மை, தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை மாவீரர்களின் உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும்,  மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல தடவைகள் அழுத்தம் கொடுத்தும் இதுவரை பயனில்லாத நிலையில் இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ‘கல்லறைகளை வழிபட வழிவிடு’, ‘கல்லறைகள் மேலிருந்து இராணுவமே வெளியேறு’, ‘மிதிக்காதே மிதிக்காதே… புனிதர்களை மிதிக்காதே’, ‘அழவிடு அழவிடு… அம்மாக்களை அழவிடு’, ‘விளக்கேற்றுவோம் விளக்கேற்றுவோம்… பிள்ளைகளுக்கு விளக்கேற்றுவோம்’, ‘கல்லறைகளை அழிப்பதும் புத்தனின் போதனையா’ போன்ற பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்,

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.