இலங்கையில் சிறுவயதிலேயே கர்ப்பமாகும் இரண்டு இலட்சம் பேர் : கீதா குமாரசிங்க

2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுவயதிலேயே கர்பமாவதாகவும் அவர்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மகளீர், மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு கோடியே 13 இலட்சத்து 67 ஆயிரம் பெண்கள் நாட்டில் உள்ளனர். இவர்களில் 27 இலட்சத்து 13 ஆயிரம் பெண்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். 2 இலட்சத்து 2 ஆயிரத்து 287 சிறுவயது தாய்மார்கள் நாட்டில் உள்ளனர்.

சிறுமிகளின் தாய் வெளிநாடுகளில் வேலை சென்றுள்ளபோது, அவர்களுக்கு வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்படுகிறது. அத்தோடு, தாய்- தந்தை பிரிந்து வாழ்வதாலும் சிறுமிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

பாலியல் கல்வி தொடர்பாக இவர்களிடம் போதிய அறிவு இல்லாமல் உள்ளது. பொருளாதார பிரச்சினைக் காரணமாக தாய் – தந்தை இருவரும் தொழிலுக்கு செல்லும் வீடுகள் அல்லது தாய்- தந்தை இருவரும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள வீடுகளிலும் சிறுமிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

விசேடமாக பெற்றோர் மதுவுக்கு அடிமையான குடும்பங்களிலும் சிறார்கள் அதிகமாக பாதிக்கப்படும் அதேசபயம் தொலைப்பேசி பாவனையும் சிறார்களை அதிகம் பாதித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடும்ப நலக் கணக்கெடுப்பினால் இந்தத் தகவல்கள் பெறப்பட்டிருந்தன. 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுடன், அவர்களின் அனுமதியுடன்கூட பாலியல் உறவில் இருப்பது எமது நாட்டை பொறுத்தவரை சட்டவிரோதமாகும்.

நாம் தற்போது இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்படும் சிறார்களுக்கு, இலவச சட்ட ஆலோசனை வழங்க கிராமிய மட்டத்திலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.