ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை எனக்கு அதிகாரம் கிடைத்தால் தண்டிப்பேன் சரத் பொன்சேகா திட்டவட்டம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பேசப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினருக்கும், ஏனைய மக்களுக்கும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. குண்டுத்தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே  அறிவித்துள்ளோம்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும்,கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

தேசிய பாதுகாப்புடன் பொருளாதாரம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு தொடர்புபட்டதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

நாட்டின் ஒருமைப்பாடு, ஆட்புல எல்லை, பொருளாதாரம், வெளிநாட்டு உறவு உள்ளிட்ட பல விடயங்கள்  தொடர்புபட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமது குறுகிய தேவைகளுக்காக தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தின. இதன் பெறுபேறும் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறையில் முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு 423 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை காட்டிலும் இம்முறை 12 பில்லியன்  ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.இராணுவத்துக்கு 218 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில்  வாழ்க்கை செலவுகள் உயர்வடைந்துள்ள பின்னணியில்  இம்முறை பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது அவசியமற்றது என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.பொருளாதாரப் பாதிப்பு என்பதற்காக வீட்டுக்கு ஜன்னல் மற்றும் கதவுகளை பொருத்தாமல் இருக்க முடியாது.

தேசிய பாதுகாப்புக்கு வருடாந்தம் இந்தியா 81 பில்லியன் டொலர், பாக்கிஸ்தான் 10.3 பில்லியன் டொலர்,பங்களாதேஸ் 5.பில்லியன் டொலi, நேபாளம்0.4 பில்லியன், இலங்கை 1.1 பில்லியன் டொலர், மலேசியா 3.4 பில்லியன் டொலர், இந்தோனேசியா 9.1 பில்லியன் டொலர், சீனா 292 பில்லியன் டொலர், தாய்லாந்து 5.7 பில்லியன் டொலர், தென்கொரியா 46.பில்லியன் டொலர், ஜப்பான் 46 பில்லியன் டொலர் ஒதுக்குகின்றன. இலங்கையும் , நேபாளும் மாத்திரமே 1 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் நிதி ஒதுக்குகின்றன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நேபாளத்தை காட்டிலும் குறைவான அளவு நிதியை தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்க முடியாது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தினரது எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது 2 லட்சமாக காணப்பட்ட இராணுவத்தினரது எண்ணிக்கை தற்போது 153000 ஆக காணப்படுகிறது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரது எண்ணிக்கையை ஒரு லட்சமாக குறைப்பதாக  அரசாங்கம் குறிப்பிடுகிறது. இது ஒருபோதும் சாத்தியமடையாது.

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில்  இராணுவத்துக்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் பயன்படுத்த முடியாத யுத்த தாங்கிகளே இராணுவத்திடம் உள்ளன. விமானப்படையிடம்  ஒரு ஜெட் விமானம் மாத்திரமே உள்ளது .ஆகவே இம்முறை புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பேசப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினருக்கும், ஏனைய மக்களுக்கும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. குண்டுத்தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே  அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன். – என்றார்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.