விவசாயிகள், உணவுப் பொருள் உற்பத்தியாளர்களு்கென விசேட செயலி!

வட மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர்,உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘FARM TO GATE‘ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய FARM TO GATE செயலிக்கான மென்பொருள் வடிவமைப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை மாதம் FARM TO GATE செயலியை அங்குரார்ப்பணம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த செயலி ஊடாக விவசாயிகளிடமிருந்து, நுகர்வோர் நேரடியாக தங்களுக்கு தேவையான உற்பத்திகளை மொத்தமாகவோ அல்லது சில்லறை விலையிலோ கொள்வனவு செய்ய முடியும்.

அத்துடன் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை பெற்றுக் கொள்ளவும், மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய உற்பத்தி பொருட்களை காலவதியாகும் முன்னர் விற்பனை செய்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வோரும் தரமான, புதிய உற்பத்திகளை நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இதன் மூலம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலியில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தரவுகள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், உற்பத்தி பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய இடம், உற்பத்திகளின் தரம், கையிருப்பிலுள்ள அளவு, விலை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

இந்த விடயங்கள் அனைத்தையும் துறைசார் திணைக்களங்களின் கிராமிய மட்ட அலுவலர்கள் மேற்பார்வை செய்ய உள்ளதோடு, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.