மத்திய வங்கியின் நாணய நிலைவறையிலிருந்து 50 இலட்சம் ரூபா மாயமானதை ஏற்றுக்கொள்கிறோம் – நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கியின் ‘நாணய வழங்கல் நிலைவறையில்’ இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை வெகுவிரையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

மத்திய வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா முன்வைத்த  கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை மத்திய வங்கியின் ‘நாணய வழங்கல் நிலவறையில் ‘வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம்  ரூபா காணாமல் போயுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம்.

இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய உத்தியோகத்தர்களை அடையாளம் காண்பதற்காக புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாகவும்,மத்திய வங்கியின் உதவி ஆணையாளர் ஊடாகவும் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் நிறைவில் தான் யார் 50 இலட்சத்தை கையகப்படுத்தியது என்பதை அறிய முடியும்.அது தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

நாணய வழங்கல் நிலையறையில் பாதுகாப்பு கெமராக்கல் பொருத்தப்படவில்லை.அத்துடன் மத்திய வங்கியின் பாதுகாப்பு கெமராக் கட்டமைப்பில் பதிவாகியுள்ள காட்சிகள் புலனாய்வு விசாரணை நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நாணய வழங்கல் நிலவறையில் இருந்து நாணயத்தை எடுக்கும் போது பொலிஸ் பாதுகாப்பு  வழங்கப்படுகிறது.அத்துடன் 24 மணித்தியாலங்களும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.