மஹாபொல புலமைப் பரிசில்   கொடுப்பனவு இருமடங்காம்! தனது நிலைப்பாடென்கிறார் கல்வி அமைச்சர்

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை இரண்டு மடங்காக அதிகரிப்பதே தமது நிலைப்பாடு. அது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜகத்குமார சுமித்ராரச்சி எம்.பி. எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –

மஹாபொல புலமைப் பரிசிலுக்கான நிதி  லொத்தர் சீட்டு விற்பனை மூலமே கொள்ளப்படுகிறது. லொத்தர் சீட்டின் விலை ஒரேயடியாக 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதால் அதன் விற்பனையில் சற்று வீழ்ச்சி காணப்படுகின்றது. எனினும் படிப்படியாக அதன் விற்பனை தற்போது முன்னேறி வருகிறது.

மஹாபொல புலமைப் பரிசிலை  அறிமுகப்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் அத்துலத் முதலியாவார். எவ்வாறாயினும் தற்போது வழங்கும் புலமைப் பரிசில் நிதி எந்த வகையிலும் போதாது. அதனை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

பல்கலைக்கழகங்கள் தொடர்பான விடயங்களை முன்னெடுப்பதற்காக உயர்கல்வி ஆணைக்குழு வொன்றை ஸ்தாபிப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணைக்குழுவில் அரசாங்க பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தனியான ஒழுங்குபடுத்தலும் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தனியான ஒழுங்குபடுத்தலும் தொழிற் கல்வி தொடர்பில் தனியான ஒழுங்குபடுத்தலும் மேற்கொள்ளப்படும்.

இவை அனைத்து தொடர்பிலும் தர நிர்ணயம் மேற்கொள்வதற்கான தனியான நிறுவனம் ஒன்றும் அமைக்கப்படும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 5 அல்லது 10 வருடங்களில் உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.