பாடசாலை மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைமையில் ஆசிரியர்கள்! மைத்திரிபால சிறிசேன வருத்தம்

மனித உரிமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு இருந்த மதிப்பு மற்றும் கௌரவம் தற்போது இல்லை. சிறந்த தலைமுறைகளை உருவாக்க ஆசிரியர்கள் முயற்சித்தாலும் அதற்கு பல தடைகள் தற்போது காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் எவ்வாறு சிறந்த எதிர்கால தலைமுறைகளை உருவாக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாட்டின் கல்வி துறையில் நகர் புறம், கிராமிய புறம் மற்றும் தோட்ட புறம் என்று வேறுபாடுகள் காணப்படுவதால் கொழும்பில் கல்விக்கான போட்டி அதிகளவில் உள்ளது.

பின்தங்கியுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை அந்தப் பிரதேசங்களின் ஏழ்மை நிலையை தீவிரப்படுத்துகிறது.

அண்மையில் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 99 சதவீதமானவர்கள் பரீட்சை முடிந்த பின்னர் வீட்டுக்கு அழுது கொண்டே சென்றார்கள்.

வினாத்தாள் கடினம் என்று மாணவர்கள் குறிப்பிட்டார்கள்.சகல மாவட்டங்களிலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியான பிறகு ஒருசில பெற்றோர் முறையற்ற வகையில் நடந்து கொள்கிறார்கள். தனது பிள்ளை குறைவான புள்ளிகளைப் பெற்றுக்கொண்டால் அந்த பிள்ளையை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்.

மிலேட்சத்தனமாகத் தாக்குகிறார்கள்.இவ்வாறான செயற்பாடுகளால் அந்தப் பிள்ளை உளவியல் ரீதியில் பாதிக்கக் கூடும்.

கடந்த காலங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகிய பின்னர் குறைந்த புள்ளிகளைப் பெற்ற பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நாட்டில் பதிவாகின.

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு பெரும் சுமையாகவே உள்ளது. எனது ஆட்சியில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் எட்டாம் தரத்துக்குப்; பின்னரே பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.ஆனால் இங்கு தான் முதலாம் தரத்தில் இருந்து பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.இந்த முறைமை மாற்றம் பெற வேண்டும்.

ஆசியர்களுக்கும்,மாணவர்களுக்கும் இடையிலான உறவு நிலை தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களைத் தண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளார்கள்.மாணவர்களைத் தண்டித்தால் அவர்களின் பெற்றோர் மனித உரிமை என்று குறிப்பிட்டுக் கொண்டு பொலிஸில் முறைப்பாடளிக்கிறார்கள்.அதன் பின்னர் ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்.

ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் மதிப்பு மற்றும் கௌரவம் தற்போது முழுமையாக இல்லாதொழிந்துள்ளது.இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு சிறந்த எதிர்கால தலைமுறையை எதிர்பார்க்க முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.