யாழ். பல்கலைக்கழக சட்ட பீடத்தில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்குக! சிறிதரன் வலியுறுத்தல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வியியற் பீடத்தை ஆரம்பிப்பதற்கும், யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்வியைத்; தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அத்துடன்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காகத் தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு மாங்குளத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

கிளிநொச்சி நாவலர் பண்ணை ஊற்றுக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வி  டிலானி ரவிச்சந்திரன் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் தோற்றி சித்தியடைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் 44 ஆவது நிலையைப் பெற்றார்.

கல்வித் தகைமைக்கு அமைய  ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்குத் தொழில்நுட்ப பிரிவுக்கு தெரிவானார். குடும்ப வறுமையால் அவரால் அப்போது பல்கலைக்கழகக் கல்வியைத்; தொடர முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து முறையான  கல்வித் தகைமை உள்ளதால் இந்த மாணவி தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

பல்கலைக்கழகத்துக்கு கல்வியைத் தொடர அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதால் தேசிய கல்லூரிக்கான கல்வியியற் கல்லூரிக்கான இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவியின் கனவுகள் இவ்வாறு இல்லாமல் போனதால் இவர் விரக்தியடைந்துள்ளதை அறிய முடிகிறது.

இந்த மாணவி தொடர்பில் கல்வி அமைச்சுக்கும்,பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குவுக்கும் இரண்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.

ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்.2022 மற்றும் 2023 ஆகிய கல்வியாண்டு மாணவர்களுடன் ஒன்றிணைந்து இந்த மாணவி பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர வாய்ப்பளிக்குமாறு வினையத்துடன் கேட்டுக் கொள்கிறேன். – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதிகாரிகள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்கள். ஆகவே குறிப்பிட்ட விடயங்களை என்னிடம் தாருங்கள் நான் அவர்களிடம்  சமர்ப்பிக்கிறேன். – என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,நன்றி அமைச்சரே.அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமான ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, பூநகரி கிளிநொச்சியை சேர்ந்த செல்வி கோபிகா சுதர்ஷன் 2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றி, உரிய  பெறுபேற்றை பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காததைத் தொடர்ந்து அவர் தமிழ்,இந்து நாகரிகம்,சமூகக் கல்வி ஆகிய பாடங்களுக்காக தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.இந்து நாகரிகம் பாடத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஒருவர் தெரிவு செய்யப்படும் நிலையில் தனது பெறுபேற்றுக்கு அமையத் தனக்கு கல்வியியற் கல்லூரி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மாணவிக்கு ஏமாற்றம் மிகுதியாகியுள்ளது.

வடக்கு  மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்து நாகரிகம், வரலாறு, சமூகக் கல்வி ஆகிய பாடங்களுக்கு மாத்திரம் 63 வெற்றிடங்கள் நிலவுகின்ற நிலையில் இந்தப் பாடங்களுக்கு ஆளணி வெற்றிடம் இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு தேசிய கல்வியியற் கல்லூரி இந்த மாணவியின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.இதனால்  இந்த மாணவி பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவியை விடக் குறைந்த பெறுபேற்றைப் பெற்றவர்களுக்கு கல்வியியியற் கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது.ஆனால் இந்த மாணவி விண்ணப்பித்த மூன்று பாடங்களுக்கும் அனுமதி கிடைக்கவில்லை.இந்த விடயங்கள் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘கல்வியியல் பீடம்’ உருவாக்கப்படவில்லை.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மிக முக்கிய பல்கலைக்கழகமாக உள்ளது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வியியற் துறையை ‘பீடமாக ‘ உருவாக்குமாறு கடந்த ஆண்டும் வலியுறுத்தினேன்.ஆனால் இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

தேசிய கல்வி நிறுவகத்தின் கிளையை  முல்லைத்தீவு மாங்குளத்தில் நிறுவுமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.தற்போதைய பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் தமது துறைசார் நடவடிக்கைகளுக்காக தலைநகருக்கு வருவதால் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.ஆகவே இந்தக் கோரிக்கை தொடர்பிலும் கரிசனை கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழியில் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்வியைத் தொடர வாய்ப்பில்லை. தமது தாய்மொழியில் சட்டக் கல்வியைத் கற்க எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1988 ஆம் ஆண்டு நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்துக்குத் தெரிவானேன். அப்போதைய சூழ்நிலையால் என்னால் சட்டக் கல்வியைத் தொடர முடியவில்லை. சட்டக்கல்வி வாய்ப்பு யாழ்.பல்கலைக்கழத்தில் இருந்திருந்தால் நானும் ஒரு சட்டத்தரணியாகியிருப்பேன். ஆகவே தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்டத்தைக் கற்கும் வாய்ப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாழ்.தீவக பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடினமான முறையில் தான் சேவையில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.