மனித உரிமை தொடர்பில் இலங்கைக்கு காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் கற்பிக்கத் தேவையில்லை! அலி சப்ரி இடித்துரைப்பு

பயங்கரவாதத் தடை சட்டம் அநாவசியமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை எமது அரசாங்கம் உறுதி செய்யும்.

எனவே காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

இலங்கைக்குள் மனித உரிமைகளை பாதுகாப்பதை நாம் பார்த்துக் கொள்கின்றோம். எம்மை விமர்சிக்கும் நாடுகளில் என்ன மனித உரிமைகள் இருகின்றன? காசாவில் 14 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதனை நிறுத்துமாறு கூறுகின்றார்களா? மாறாக ஜனாதிபதி அங்கு சென்று ஆயுதங்களையும், நிதியையும் வழங்குகின்றார். எனவே இவ்வாறான நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால் இலங்கையிலுள்ள மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை நானும் அங்கீகரிக்கவில்லை.

நீதி அமைச்சராக பதவி வகித்த போது, நான் இது தொடர்பான சட்டத் திருத்தமொன்றையும் முன்வைத்திருக்கின்றேன். ஏனைய நாடுகளின் அழுத்தங்களால் நாம் இதனைக் கூறவில்லை. எமது நாட்டிலுள்ள தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அதே வேளை பிரிவினைவாத நிலைப்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்று தற்போதுள்ள இளம் தலைமுறையினரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாம் பிரிவினைவாதத்தை விரும்புபவர்கள் அல்லர் என்று தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இலங்கைக்கு வெளியிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் தமது வாக்கு வங்கிகளுக்காக பிரிவினைவாதத்தை ஆதரிக்கின்றனர்.

இங்கிலாந்தில் ஹமாஸ் தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. ஆனால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை கௌரவிக்கும் வகையில் நினைவேந்தல்கள் இடம்பெறுகின்றன.

இது இரட்டை நிலைப்பாடில்லையா? எனவே தான் இவர்களின் கருத்துக்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிடுகின்றோம். இதன் அரத்தம் மக்கள் பாகுபாடாக நடத்தப்பட வேண்டும் என்பதல்ல. இங்கும் நிச்சயம் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடை சட்டம் மாற்றப்பட வேண்டும். அது அநாவசியமாக பயன்படுத்தப்படக் கூடாது. நினைவேந்தல்களை செய்வதில் பிரச்சினையில்லை.

பிரபாகரனை நினைவு கூர்வதற்கு அவரது பெற்றோருக்கு உரிமையுண்டு. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பை பெருமைப்படுத்த அனுமதிக்க முடியாது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை பெருமைப்படுத்துவது நாட்டில் வன்முறையைத் தூண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை அங்கீகரிக்கின்றோம். உரிமைகளுக்காக அமைதியாகப் போராடுவதில் தவறில்லை. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.