அதிகாரிகளை கண்காணிக்க ஜனவரி முதல் நடவடிக்கை! ஆஷு மாரசிங்க கூறுகிறார்

அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது. அதனைச் செய்யத்  தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்த்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டைக் கட்டியெழுப்பப் பயணிக்க வேண்டிய வழியை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அதன் பிரகாரம் செயற்பட்டு வருவதாலேயே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியும் எமக்குக் கிடைக்க இருக்கிறது.

எதிர்வரும் ஜனவரியில் அந்த உதவி கிடைக்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிரகாரம் எமக்கு மொத்தமாக 670 அமெரிக்க டொலர்கள் கிடைக்கின்றன.

நாணய நிதியத்தின் இந்தக் கடன் உதவி கிடைப்பதன் மூலம் சர்வதேசத்துக்கு இலங்கை தொடர்பில் நம்பிக்கை ஏற்படுகிறது.

இதன் காரணமாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளையும் எமக்குப் பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அதேநேரம் ஜனாதிபதியின் நிதிக்கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கையை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாடு என்ற வகையில் இது எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

அத்துடன் வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரச வருமானம் அதிகரிக்கப்படவேண்டும். அதனாலேயே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் அரச வருமானங்களைச் சேகரிக்கும் அதிகாரிகள் அதனை முறையாகச் செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் தங்களின் பொறுப்பை முறையாகச் செய்யத் தவறியதாலே அரச வருமானம் குறைவடைந்திருந்தது.

அதனால் இந்த அதிகாரிகளின் மோசடிகளை நிறுத்த இவர்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும் முறையாக செயற்படாத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும் தற்போது சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நாட்டில் இந்த வருடத்தின் புதன்கிழமை வரை வரி வருமானமாக 2540 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.

வரி அல்லாத வருமானமாக 254 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதன் பிரகாரம் நாட்டின் மொத்த வருமானமாக 2794 பில்லியன் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

எமக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கி இருக்கும் இலக்கு 2850 பில்லியனாகும். அதனால் நாணய நிதியத்தின் இலக்கை அடைவதற்கு முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

அதனை செய்வதற்கு அரச வருமானம் சேகரிக்கும் அதிகாரிகளில் இருக்கும் ஊழல் மோசடிமிக்க அதிகாரிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி முதல் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.