நாட்டைக் கட்டியெழுப்ப அரசு பயணிக்கும் பாதையைத் தவிர வேறு பாதை இல்லை! வஜிர அபேவர்தன அடித்துக் கூறுகிறார்

இலங்கை எதிர்வரும் ஜனவரியில் இருந்து வங்குரோத்து நிலையில் இருந்து மீள்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் உலக நாடுகளின் உதவிகள் எமக்குக் கிடைக்கப்பெறும்.

இதற்கான அனைத்து கௌரவமும் ரணில் விக்ரமசிங்கவுக்கே சேரவேண்டும். அதனால் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் பயணிக்கும் பாதையைத் தவிர வேறு பாதை இல்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

ஆட்சியாளர்களின் பிழையான தீர்மானங்களால் 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி எமது நாடு வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்தோம் . எமக்கு கடன் வழங்க யாரும் முன்வரவில்லை. நாட்டில் தேசிய விழாக்கள் எவையும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க யாரும் முன்வரவில்லை. சில அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி பெயர் பலகையை மறைத்துக்கொண்டார்கள்.

அரசியல்வாதிகளுக்கு வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் மே 12 ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டை மீட்பதற்கு முன்வந்தார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது நாட்டில் எரிபொருள் இல்லை. எரிவாயு இல்லை. அத்தியாவசிய பொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு. இவற்றை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் இருக்கவேண்டிய நிலை. எரிபொருள் பௌசர் வரும்போது  கை தட்டி வரவேற்கும் சமூகமே அன்று இருந்தது. இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க அனைவரதும் ஒத்துழைப்பை அவர் கோரி வந்தார். அதன் பிரகாரமே அவர் ஜூலை 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

நாடு வங்குரோத்து அடைந்து ஒருவருடமும் 6 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகி இருந்துள்ளது. உலகில்  வங்குரோத்து அடைந்த நாடுகள் பல இருக்கின்றன. அவை இன்னும் அதில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றன. ஆனால் எமது நாட்டுக்கு குத்தப்பட்டிருந்த வங்குரோத்து என்ற முத்திரையை ரணில் விக்ரமசிங்க ஒருவருடம் 6 மாதங்களில் அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக எமது வங்கி கடன் அட்டையை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலகில் இருக்கின்ற அதிகார பலமிக்க பல தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியே இந்த மாற்றத்தை ஏற்படுத்த  நடவடிக்கை எடுத்தார். அதனால் இதன் பின்னர் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்ல இடமளிக்கக் கூடாது. அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை வழங்குதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தைப் பலப்படுத்தி இருக்கிறோம்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் வழங்கி இருக்கின்றன. அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாலே எமக்குக் கடன் வழங்க நாணய நிதியம் முன்வந்திருக்கிறது. இதன்மூலம் ஜனவரி முதல் அனைத்து நிதி நிறுவனங்களில் இருந்தும் எமக்கு உதவிகள் கிடைக்க ஆரம்பிக்கும். அதன் மூலம் படிப்படியாக வரி குறைப்பு செய்யவும் மின்சாரக் கட்டணங்களில் குறைப்பு செய்யவும் முடியுமாகும்.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் தற்போது செல்லும் வழியைத் தவிர வேறு வழியில்லை. எதிர்வரும் 20 வருடங்களில் இலங்கையை ஆசியாவில் முன்னணி நாடாகக் கொண்டு செல்வதே எமது இலக்காகும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.