வரித் திருத்தம் பொருளாதார மறுசீரமைப்பு இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது! ஹர்ஷ டி சில்வா கருத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்குழு உறுப்பினர் என்பதற்காக  பொய் கூறி மக்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை.

வரி திருத்தங்கள் இன்றியோ, பொருளாதார மறுசீரமைப்புக்கள் இன்றியோ நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் முற்றாக வீழச்சியடைந்து விடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அரசாங்கம் எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு வேலைத்திட்டங்கள் வீழ்ச்சியடையும்.

அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் எமக்கு கை கொடுப்பதற்கு யார் இருக்கின்றனர்? 2023 ஐ போன்றே, 2024 ஆம் ஆண்டும் நெருக்கடி மிக்கதாகவே இருக்கும்.

பொருளாதார மறுசீரமைப்புக்கள் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கற்பனைக் கதையைக் கூறுவதற்கு நான் தயாராக இல்லை.

சீன எக்ஸிம் வங்கி, பரிஸ் கிளப் நாடுகள் மற்றும் இந்தியா என்பவற்றுடன் கடன் மறுசீரமைப்பைப் மேற்கொள்வதற்கான ஆரம்ப இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதன் மூலம், நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் முதற்படியைக் கடந்துள்ளோம்.

எனினும் அதற்கான ஒப்பந்தம் இதுவரை கையெழுத்திடப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மாத்திரமே, வர்த்தகக் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும்.

பொய் கூறி மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள் இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். கடந்த ஆண்டு பெறுமதி சேர் வரியின் மூலம் பெற்றுக் கொண்ட வருமானத்தை விட, இரு மடங்கு அதிக வருமானத்தை இவ்வாண்டு பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

பூச்சியமாகக் காணப்பட்ட சில பொருள்களுக்கான வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றதாகும். இதனால் குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

செல்வந்தர்களுக்கான சொத்து வரியை அதிகரித்தால், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். எனினும் இதனையும் சிலர் எதிர்க்கின்றனர்.

அனைத்து வரிகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தற்போது நாட்டுக்கு கிடைக்கும் வரி வருமானம் போதுமானதல்ல.

மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சாரசபை இவ்வருடம் சுமார் 60 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. ஊழல், மோசடிகளைக் குறைத்தால் மின் கட்டணத்தைக் குறைத்து இலாபமீட்டலாம்.

டொலர் வருமானம் கிடைத்தால் மாத்திரமே முதலீட்டுக்கு இடமளிக்கப்படும் எனக் குறிப்பிடுகின்றமை முட்டாள் தனமானதாகும். அவ்வாறெனில் டயலொக் மூலம் டொலர் வருமானமா கிடைக்கின்றது? டயலொக் நிறுவனத்தின் முதலீடு முக்கியத்துவமற்றதா? அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும்.

எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும், மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும். மறுசீரமைப்பு என்பதை முழுமையாக சொத்துக்கள் விற்கப்படுவதாகக் கருதக் கூடாது.

மறுசீரமைப்பிலுள்ள ஓர் அங்கமே விற்பனை செய்வதாகும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ நிறுத்திய இடத்திலிருந்து வேலைத்திட்டங்களை தொடர்ந்திருந்தால், இன்று இலங்கை பங்களாதேஷிடம் கையேந்தும் நிலைமைக்கு  சென்றிருக்காது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.