மிருசுவில் படுகொலை நினைவு அனுஷ்டிப்பு!
தென்மராட்சி-மிருசுவில் பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23 ஆவது நினைவு தினம் புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டது.
சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில் மேற்படி நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
மேற்படி நிகழ்வில் சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிப் பொருள்களை வழங்கி வைத்தார்.
கடந்த 20-12-2000 ஆம் ஆண்டு சிறுவர்கள் உட்பட 8 பேரை இலங்கை இராணுவம் கூரிய ஆயுதங்களால் குத்திப் படுகொலை செய்திருந்த நிலையில் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிக்கு 2015 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அவர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை