இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி இடம்பெறும் அறுதியிட்டுக் கூறுகிறார் சீ.வி.கே. சிவஞானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு –

கடந்த 18 ஆம் திகதி எங்களுடைய கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகத் தெரிவும் இடம்பெற இருக்கின்றன.

எந்தக் காரணம் கொண்டும் கட்சிக்கான புதிய தலைவர் தெரிவு அல்லது பொதுச் சபைக் கூட்டம் ஒத்திவைக்கின்ற எண்ணத்தில் கடந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இல்லை.

ஆகவே, தெரிவு என்பதில் தெளிவாகவே நாங்கள் இருக்கின்றோம். மாற்று எண்ணத்திலும் எவரும் இல்லை.

தேசிய மாநாட்டுக் கூட்டத்தைக் குறிப்பிட்ட திகதியில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சகலரும் உறுதியாக இருக்கின்றனர்.

ஆகையினால், திட்டமிட்டபடி நிச்சயமாக இந்தக் கூட்டம் நடைபெறும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதில் தலைவர் தெரிவும் நடைபெறும்.

அந்தத் தெரிவில் போட்டி இருக்குமா, இல்லையா என்பது குறித்து எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாகத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத் தெரிவு நடக்கும். இவை நடைபெறும் வாய்ப்புக்கள் 90 வீதம் இருக்கின்றன.

எனினும், வேறு ஏதும் தேசிய பிரச்சினை, அல்லாவிடின் சூறாவளி அல்லது சுனாமி அடித்தால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, கூட்டமும் தெரிவுகளும் அறிவிக்கப்பட்டபடி நிச்சயம் நடைபெறும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.