அரசியல்வாதிகளின் சட்டவிரோத உத்தரவுகளை அரச அதிகாரிகள் என்றும் செயற்படுத்தக்கூடாது! நீதி அமைச்சர் விஜேதாஸ  உத்தரவு

அரசியல்வாதிகள் உத்தரவிடும் பிழையான கட்டளைகளை அரச அதிகாரிகள் செயற்படுத்தக் கூடாது. அது தொடர்பான சட்ட நிலைமையை தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெவித்தார்.

நாடாளுமன்ற பணியாளர்கள் குழு அதிகாரிகளுக்கு கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் வீதிகளை புனரமைத்தல், வீதி விளக்குகளை பொருத்துதல் மற்றும் மரண வீடுகள் திருமண வீடுகளுக்கும் செல்வார்கள்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது இந்த வேலையை செய்வதற்கு என்றே மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜேஆர் ஜயவர்த்தன காலத்தில் இருந்தே இந்த நிலை ஏற்பட்டது.

அந்த காலத்தில் இருந்து அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு  வழங்கி வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மட்டத்திலேயே இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்காக செயற்படுகின்றனர்.

எங்களுக்காக சட்டம் இயற்றி வருவதாகவே ஆரம்பத்தில் மக்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். அவ்வாறு தேசிய மட்டத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகளை தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் வீதி புனர்நிர்மாணம் செய்கிறார்கள். நிதி ஒதுக்கீட்டை பெற மக்கள் பிரதிநிதிகள் விரும்புகின்றனர். இந்த முறைமையால் நாடு அழிவடைந்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்றம் நாட்டுக்காக தீர்மானங்களை எடுக்கவில்லை. மாறாக நாடாளுமன்றம் கட்சிக்காகவும் தலைவருக்காகவும் கட்சியை பாதுகாக்கவும் தீர்மானங்களை மேற்கொண்டன.

அதனால் நாடு அழிவடைந்தது. ஆட்சியாளர்களுக்கு நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. போராட்டம் இடம்பெற்றது. மக்களதும் எமதும் என இந்த இரண்டு தரப்பினரின் பிழை காரணமாக இவை ஏற்பட்டன.

மக்களுக்கு இதனைப் பழக்கியது யார்? நாங்கள் என்னதான் சட்ட திட்டங்களை கொணடுவந்தாலும் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக இருந்தால் நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையை  பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் நம்பிக்கையை பாதுகாக்காவிட்டால் முறைமைகள் சீர்குலைந்துவிடும். முறைமைகள் சீர்குலைந்துவிட்டால் எமது வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை. உத்தரவாதம் இல்லை. இது நாட்டுக்கு ஏற்படக்கூடிய மிகவும் மோசமான விடயமாகும். அதனால் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகமாக குற்றச்சாட்டுக்கள் இருப்பது நாடாளுமன்றத்துக்காகும்.

மேலும் சுகாதார அமைச்சில் மருந்து மோசடி ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இமியுனொங்லாNபியுலின் மருந்து என வேறு ஒரு மருந்தை கொண்டுவந்திருப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

அது இன்சியுலின் என நோயாளர்களுக்கு வழங்கியும் இருக்கிறது. அப்படியானால் இந்த குற்றத்தை யார் செய்தார்கள்? அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதா அரசியல்வாதிகள் மேற்கொண்டார்களா என நீதிமன்றம் தேடுகிறது. இந்த முறைமை இவ்வாறு செல்லும்போது மக்கள் விரக்தியடைவார்கள். அதனால் இந்த முறைமையை சரி செய்துகொள்ள வேண்டும்.

அதனால் நான் எனது அதிகாரிகளுக்கு தெரிவிப்பது, நான் உத்தரவிட்டாலும் அது பிழையான விடயம் என்றால் அதனை செய்ய வேண்டாம். நான் விடுக்கும் உத்தரவு சட்டவிரோதம் என்றால் அதனை செயற்படுத்திய பின்னர் எனக்கு சொல்ல வேண்டாம்.

நான் யாரையும் பாதுகாக்கப்போவதில்லை என்பதை தெரிவித்திருக்கிறேன். அதனால் அதிகாரிகள் சரியான விடயங்களை மாத்திரம் செய்யவேண்டும். பிழையான உத்தரவொன்றை வழங்குமாக இருந்தால் அதன் சட்ட நிலைமை தொடர்பாகத் தெளிவுபடுத்துவது அதிகாரிகளுக்குரிய பொறுப்பாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.