ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசிடமிருந்து நாடு விடுதலைபெறும் காலம் வெகுதொலைவில்! பேராயர் கர்தினால் வேதனை

 

உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கவனத்தில் கொள்ளாத போக்கே இன்று எம்நாட்டில் காணப்படுகிறது. ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசாங்கமே எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரதான நள்ளிரவு ஆராதனை கட்டான – ஹல்பே புனித பிரான்ஸிஸ் சேவியர் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பேராயர் –

இலங்கையில் ஒருவேளை உணவைக்கூட சரியாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் 8 மில்லியன் மக்கள் காணப்படுகின்றனர் என சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது.

அந்த எண்ணிக்கை தற்போது இருமடங்காகியிருக்கக் கூடும். எதிர்கால கனவுகள் அனைத்தும் சிதைந்து போன நிலையிலேயே நாட்டிலுள்ள பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவற்றுக்கு மத்தியில் வரி சுமையை அதிகரித்து பொருள்களின் விலைகளும் அதிகரித்து, தொழில்களை இழந்து, பிள்ளைகளின் பசியைப் போக்க முடியாத பலரும் இன்று இந்த நாட்டில் உள்ளனர்.

இவ்வாறான நிலையிலும் உலகில் ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றமை உண்மையில் கவலைக்குரியதாகும்.

ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளது.

உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கூட கவனத்தில் கொள்ளாத, நீதியும் நியாயமும் அற்ற நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அதிகார மோகத்திலுள்ளவர்களாலேயே நாடு ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறானவர்களால் இம்முறை நத்தார் பண்டிகையில் வறுமையிலுள்ளவர்களுக்கு கை கொடுப்பதற்கானதாக அமைந்துள்ளதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே இல்லாதோருக்கும் வறியவருக்கும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு சகல கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கமல்லாத மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.