நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த வருடம் ஒன்றுபட்டால் ஸ்திரநிலைக்கு கொண்டுவரலாம்! ஆஷு மாரசிங்க நம்பிக்கை

 

அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் அடுத்த வருடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுஇ பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியும். அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார முகாமைத்துவம் திட்டத்தின் மூலம் நாட்டின் தேசிய வருமானத்தை 3 மில்லியனுக்கு நெருங்க முடியுமாகி இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூரநோக்கு வேலைத்திட்டம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரநிலையை அடைந்து வருகிறது.

அரச வருமானம் மற்றும் டொலர் கையிருப்பை அதிகரிப்பது மிகவும் சவால்மிக்க விடயமாகும்.

என்றாலும் ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்து வருவதை தரவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த வருடத்தில் 28 ஆம் திகதிவரை வரி வருமானமாக 2720 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது.

அதேபோன்று வரி அல்லாத வருமானமாக 253 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதன் பிரகாரம் மொத்த தேசிய வருமானம் 2973 பில்லியன் ரூபா இதுவரை பதிவாகி இருக்கிறது. இந்த வருடம் முடிவடைய இன்னும் சில தினங்கள் இருக்கின்றன. அதனால் தேசிய வருமானம் மேலும் அதிகரிக்கும்.

மேலும் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை 3 மில்லியனாக அதிகரிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. அந்த இலக்கை தற்போது எட்டக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த வருடத்தில் மொத்த தேசிய வருமானம் 2850 பில்லியனாக இருக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கி இருக்கும் இலக்காகும்.

தற்போது நாங்கள் அந்த இலக்கைத் தாண்டியுள்ளோம். அதேநேரம் 2023இல் மொத்த அரச செலவு 3063 பில்லியனாகும்.

அரசாங்கத்துக்கு வரி செலுத்தக்கூடியவர்களின் வரி பணத்தை முறையாக பெற்றுக்கொண்டால் எமது வருமானத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும்.

அத்துடன் ஜனவரி முதல் வற்வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் செலவு 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

ஏனெனில் வரி விதிக்கப்பட்டிருக்கும் பொருள்களில் இருந்து அத்தியாவசிய பொருள்கள் இந்த வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியாயின் எந்த அடிப்படையில் 40ஆயிரம் ரூபா அதிகரிக்கும் எனத் தெரிக்க முடியும்?.

அதேநேரம் வரி அதிகரிக்கப்படுவதால் பணவீக்கம் நூற்றுக்கு 2அல்லது 3வீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை அறவிட நடவடிக்கை எடுத்தால் பணவீக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும்.

அதனால் அடுத்த வருடத்தில் இருந்து வரி செலுத்த வேண்டிய நிறுவனங்கள் தொடர்பாக கண்காணிக்க முறையான வேலைத்திட்டம் அமைத்திருக்கிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.