தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய கூட்டணியில்  பங்கேற்பதே சாணக்கியம்!  அமைச்சர் விஜயதாஸ ‘அட்வைஸ்’

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து பொதுவேட்பாளரை களமிறக்குவதோ, அல்லது தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதோ நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயலாகவே அமையும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் புதிய தேசிய அரசியல் கூட்டணியையும், இன,மத,மொழி வாதற்ற வேட்பாளரையும் அடையாளம் கண்டு அதில் பங்கேற்பதே சிறந்த அரசியல் சாணக்கியமான நடவடிக்கையாக அமையும். அவ்வாறு இல்லாது விட்டால் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிளவுபடுத்தும் செயற்பாடாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் விஜயதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு, கிழக்கு தமது பூர்வீகமான பிரதேசம் என்ற நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது பிரதேசத்தை மையப்படுத்தியதாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கோ அல்லது தேர்தலை மக்களின் ஆதரவுடன் புறக்கணிப்பதற்கோ முழுமையான உத்தியைக் கொண்டிருக்கின்றன.

ஆனால், யதார்த்த நிலைமைகளைப் பற்றி அக்கட்சிகள் சிந்திப்பது தான் மிகவும் அவசியமானதாகின்றது. வடக்கு,கிழக்கை மையப்படுத்திய பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அந்த வேட்பாளருக்கு வெறுமனே அப்பகுதிகளில் தான் ஆதரவு கிடைக்கும். வடக்கு,கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழ் மக்கள் ஆதரவளிக்காத நிலைமையொன்று ஏற்படுவதற்கே அதிகமான சாத்தியப்பாடுகள் உள்ளன.

இதனால் தேர்தல் முடிவில் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பிளவுபடுத்துவதாகவே அந்த முயற்சி மாறிவிடும் சூழலே அதிகமாக உள்ளது.

மறுபக்கத்தில், தமிழ் கட்சிகளின் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை. அவ்வாறு பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டதன் பின்னர் தேசிய கட்சிகளின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றால் அதன் பின்னர் அசௌகரியத்துக்குள் உள்ளாகப்போவதும் தமிழ் மக்கள் தான். ஆகவே அதுபற்றியும் தமிழ்க் கட்சிகள் கரிசனைகளைக் கொள்வதே பொருத்தமானது.

என்னைப்பொறுத்தவரையில், தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கடந்த காலத்தில் எடுத்த தீர்மானங்களின் அடிப்படையில் பல்வேறு அதிருப்தியான நிலைமைகள் காணப்படுவதை ஏற்றுக்கொள்கின்றேன். அந்த வகையில், தமிழ் அரசியல் கட்சிகள் தமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இன,மத,மொழி, வாதங்களற்ற, வாக்குறுதிகளை மறுதலிக்கின்ற வேட்பாளர் அற்றதொரு தரப்பினை அடையாளம் காண வேண்டும்.

அவ்வாறு தமிழ் அரசியல் கட்சிகள் அடையாளம் காணும் அரசியல் தரப்பானது புதிய தேசிய அரசியல் கூட்டணியாக இருப்பதோடு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமது விடயங்களையும் உள்ளீர்ப்பதற்கான பேச்சுக்களை முன்னெடுத்து தேசிய ரீதியில் பங்குபற்ற வேண்டும்.

அவ்விதமான தீர்மானமொன்றை தமிழ் அரசியல் கட்சிகள் முன்னெடுப்பதே அரசியல் சாணக்கியமாக அமைவதோடு தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கும் சிறந்ததாகக் காணப்படும்.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது, சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் காணப்பட்டதைப்போன்றதொரு சூழலை உருவாக்குவதற்கு தேசிய ரீதியில் தமிழ் அரசியல் கட்சிகளின் பங்களிப்பானது மிகவும் இன்றியமையாதவொரு விடயமாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.