மன்னாரில் நீராலும் உணவாலும் நோய்த்தொற்று பரவும் அபாயம்! வைத்தியர் த.விநோதன் எச்சரிக்கை
மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படாவிட்டால் மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கலாம் என்பதுடன் நீர் மற்றும் உணவுகள் ஊடாகப் பரவும் நோய்த்தொற்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.விநோதன் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகமொன்றுக்கு கருத்துத்; தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் –
மன்னார் நகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தற்போது ஒழுங்கான முறையில் இடம்பெறாமையால் மன்னார் நகர் பகுதி பாரியதொரு சுகாதார சீர்கேட்டு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
மக்கள் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளும்போது சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் வைத்தியசாலைகளிலும் திண்மக் கழிவகற்றல் செயன்முறை முற்றாக முடங்கியுள்ளது.
நகர் புறங்களிலும், பொது இடங்களிலும் அதேவேளை வைத்தியசாலை சூழலிலும் மருத்துவக் கழிவுகள் அல்லாத ஏனைய கழிவுகள் சூழ்ந்து காணப்படுகின்றது.
தற்போது மழை காலம் என்பதால் நோய்க் கிருமிகளின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது.
வயிற்றோட்டம், வாந்தி பேதி போன்ற நோய்களும் மழை காலத்தில் அதிகமாகப் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. மன்னார் நகர் பகுதியில் தேங்கியிருக்கும் இந்த திண்மக் கழிவுகள் இவ்வாறான கிருமித் தொற்று பரவலுக்கு ஏதுவாக அமைகிறது.
அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலை சூழலிலும் கழிவுகள் மற்றும் புற்கள் உட்பட பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. ஆனாலும் மன்னார் வைத்தியசாலை சுத்தப்படுத்தலுக்கு போதிய ஆளனியினர் இன்மையால் இந்தப் பிரச்சினை நீடித்து வருகிறது.
எனவே மன்னார் மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள பொது மக்கள், நலன் விரும்பிகள் வைத்தியசாலை சூழலை சுத்தப்படுத்த உதவிகளை வழங்க முன்வருவதோடு, குழுக்களாகவும் தனி நபர்களாகவும் சிரமதானப் பணிகளை மேற்கொண்டு தங்களுடைய உதவியை வழங்க வேண்டும்.
சுகாதாரப் பணி உதவியாளர்கள் 85 பேர் மன்னார் வைத்தியசாலையில் பற்றாக்குறையாகக் காணப்படுகின்ற நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள 10 நபர்களே குறித்த சுத்தப்படுத்தல் பணிகளை மன்னார் வைத்தியசாலை சூழலில் மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை